டெரிக் பிரின்ஸின் வாழ்க்கை, ஊழியம் மற்றும் மரபு

டெரிக் பிரின்ஸ் அவர்கள், சர்வதேச வேதாகம போதகராக இருந்தார். அவர் தனது இறையியல் நுண்ணறிவிற்காக மற்றும் உண்மையான கிறிஸ்தவ விசுவாசத்திற்காக மிகவும் மதிக்கப்பட்டார். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான புதிய கிறிஸ்தவ வாசகர்களை ஈர்க்கும் 100 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

டெரிக் பிரின்ஸ்

ஊழியம்
சர்வதேச வேதாகம ஆசிரியர், போதகர், மிஷனரி மற்றும் இறையியலாளர்
பிறப்பு
14 ஆகஸ்ட் 1915, பெங்களூர், இந்தியா.
இறப்பு
24 செப்டம்பர் 2003 (88 வயதில் ), எருசலேம், இஸ்ரேல்

பொருளடக்கம்

வேண்டிய பகுதிக்கு செல்ல கிளிக் செய்யவும்

ஆரம்ப கால வாழ்க்கை

டெரிக் பிரின்ஸ் 1915ம் ஆண்டில் இந்தியாவின் பெங்களூர் பட்டணத்தில் ஒரு பிரிட்டிஷ் இராணுவ குடும்பத்தில் பிறந்தார். 14 வயதில் அவர் ஈட்டன் கல்லூரியில் படிக்க ஒரு உதவித்தொகை பெற்று, கிரேக்கம் மற்றும் லத்தீன் மொழிகளை படித்தார். அவர் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது கல்வியைத் தொடர்ந்தார். அங்கு அவர் கிங்ஸ் கல்லூரியில் பண்டைய மற்றும் நவீன தத்துவத்தில் ஒரு மேலாய்வு உபகார ஊதியம் பெற்றார். டெரிக் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்ற போது, கூடுதலாக, எபிரேயம் மற்றும் அரமிய மொழி உட்பட, பல நவீன மொழிகளை கற்றார். பின்னர் எருசலேமில் ஏபிரேய பல்கலைக்கழகத்தில் இருந்தபோது , அந்த மொழிகளை மேம்படுத்திக்கொண்டார்.

டெரிக் ஆங்கிலிக்கன் திருச்சபையில் வளர்க்கப்பட்டாலும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது கிறிஸ்தவ அடித்தளங்களை கைவிட்டு, ஒரு நாத்திக உலகப் பார்வையை ஏற்றுக்கொண்டார். தன் மூன்றாம் நிலை ஆய்வின் ஆண்டுகளை நினைவுகூர்ந்து, அவர் பின்னர் கூறினார்:

"நீண்ட வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்கள் எனக்கு நிறைய தெரியும், மற்றும் பல்வேறு விஷயங்களை முயற்சித்தேன். ஆனால், திரும்பிப் பார்க்கும்போது, நான் குழப்பமும், விரக்தியும், ஏமாற்றமும் , மாயையும் அடைந்தேன், பதில்களை எங்கே கண்டுபிடிப்பது என்று எனக்குத் தெரியவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்".

இரண்டாம் உலகப்போர்

டெரிக்கின் கல்வி வாழ்க்கை இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்துடன் தடைப்பட்டது. 1940ல் அவர் தனது தனிப்பட்ட நம்பிக்கைகளின் அடிப்படையில் ஒரு போரிடாத சிப்பாயாக “ராயல் ஆர்மி மெடிக்கல் கோரில்” சேர்ந்தார். இராணுவ சேவையின் பநணியாற்றும்போது தனது தத்துவ படிப்பை முன்னெடுத்துச் செல்ல, டெரிக் அவருடன் ஒரு வேதாகமத்தை எடுத்து சென்றார், ஏனென்றால் அதை அவர் அந்நேரத்தில் தேவனால் ஊக்கம்பெற்ற வார்த்தை என்று பார்ப்பதைவிட, ஒரு தத்துவப் படைப்பாகவே கருதினார்.

31 ஜூலை 1941 அன்று, யார்க்ஷயரில் உள்ள ஸ்கார்பரோவில் உள்ள ஒரு பயிற்சி முகாமில் தங்கியிருந்தபோது, அவருக்கு இயேசுவுடன் ஒரு வல்லமையான நேர்முக சந்திப்பு ஏற்பட்டுது. இது அவரது வாழ்க்கையின் போக்கை மாற்றியது. அந்த அனுபவத்தை நினைவுகூர்ந்து அவர் சொன்னது:

"நான் இயேசுவின் குரல் கேட்டேன், வேதவசனங்கள் மூலம் மிகவும் தெளிவாக பேசினார். நான் அவரது குரலை கேட்ட நாள் முதல், இன்று வரை, சந்தேகிக்காத இரண்டு உண்மைகள் உள்ளன. இயேசு உயிரோடு இருக்கிறார் என்றும் வேதாகமம் தேவனுடைய வார்த்தை என்றும் நான் ஒருபோதும் சந்தேகிக்கவில்லை."

இவ்வாராக, 20 ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான வேதாகம ஆசிரியர்களில் ஒருவரின் ஆவிக்குரிய பயணம் தொடங்கியது.

அவரது கிறிஸ்தவ விசுவாச மாற்றத்திற்குப் பின்னர் கிட்டத்தட்ட உடனடியாக, டெரிக் வட ஆப்பிரிக்காவின் பாலைவனங்களில் பணிமாற்றம் பெற்றார். அங்கு அவர் மூன்று ஆண்டுகள் இராணுவ மருத்து பணியாளராக பணியாற்றினார். அவர் தன் ஓய்வு நேரத்தை, வேதாகமத்தை படிக்கவும், ஆண்டவரோடு ஒரு தனிப்பட்ட உறவை வளர்க்கவும் அர்ப்பணித்தார்.

போரின் முடிவில், டெரிக் எருசலேமில் நிலைகொண்டிருந்த போது இராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார். யூத மக்கள் இஸ்ரவேல் திரும்பின வேதாகம தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தைப் கண்டார்.

லிடியா பிரின்ஸ்

1946 இல், டெரிக் தனது முதல் மனைவி லிடியா கிறிஸ்டென்சனை திருமணம் செய்து கொண்டார். அவர் எருசலேம் அருகே ஒரு அனாதை இல்லத்தை நடத்தி வந்தார். அவ்வாறு செய்ததன் மூலம், டெரிக் பிரின்ஸ் எட்டு தத்தெடுக்கப்பட்ட சிறுமிகளின் தந்தை ஆனார்.

டெரிக்கும் லிடியாவும் 1948ல் யூத தேசமான இஸ்ரவேல் நிறுவப்பட்ட வரை எருசலேமில் வாழ்ந்தனர். சுதந்திரப் போரின் போது அரபிய மற்றும் இஸ்ரவேலிய படைகளுக்கு இடையே மாட்டிக்கொண்ட அவர்கள் தங்கள் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு தயக்கத்துடன் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தனர். மத்திய இலண்டனில் குடியேறியவுடன், டெரிக் ஹைட் பார்க்கில் உள்ள ஸ்பீக்கர்ஸ் கார்னரில் பிரசங்கிக்கத் தொடங்கினார். அதில் பெரும்பாலும் லிடியா மற்றும் அவர்களுடைய மகள்களில் சிலர் சேர்ந்துக்கொண்டார்கள். மேலும் அங்கு வசனத்தை கேட்டவர்கள், அவர்களுடைய வீட்டிற்கு அழைக்கப்பட்டனர், இதனால் அவர்கள் வீட்டில் ஒரு புதிய சபை பிறந்தது. இது 1956 வரை தொடர்ந்தது, ஜனவரி 1957 இல் பிரின்ஸ் தம்பதியர் கர்த்தரின் அழைப்புக்கு செவிகொடுத்து மிஷனரிகளாக கென்யாவுக்கு குடிபெயர்ந்தனர்.

தொடர்ந்து வந்த ஆண்டுகளில், டெரிக்கும் லிடியாவும் உள்ளூர் மக்களுக்கு ஊழியம் செய்யும்போது அதிக கனிகளைக் கண்டனர். இதில் ஒரு பெண் ஜெபத்தின் மூலம் உயிருடன் எழுப்பப்பட்டாள்.

1962ல், இவ்விருவரும் ஒரு அனாதை கென்ய குழந்தையை தத்தெடுத்து கனடாவில் விடுமுறையில் இருந்தனர். 25 ஆண்டுகள் டெரிக்கிற்கு மூத்தவரான லிடியா, தனது எழுபது வயதுகளின் தொடக்கத்தில் இருந்த படியால், நண்பர்கள் மற்றும் பிற விசுவாசிகளுடன் நெருக்கமாக குடியேற ஏங்கினார். இந்த தேவையால் தூண்டப்பட்ட டெரிக், மினியாபோலிஸில் உள்ள பெந்தேகோஸ்தே தேவாலயத்தில் வேதாகம ஆசிரியராக ஆவதற்கான அழைப்பை ஏற்றுக்கொண்டார்.

டெரிக் மற்றும் லிடியா பிரின்ஸ்

அடுத்த பத்தாண்டுகளின் முடிவிற்குள், பிரின்ஸ் குடும்பத்தினர் இன்னும் மூன்று முறை இடம்பெயர்ந்தனர்: சியாட்டில், சிகாகோ மற்றும் ஃபோர்ட் லாடெர்டேல் என்ற வரிசையில். ஊழியத்தில் முன்னேற்றங்கள் புதிய மற்றும் எதிர்பாராத கதவுகளை திறந்தன, ஆனால் இவ்விருவரும் எப்போதும் இருக்கும் கர்த்தரின் அழைப்புக்கு உண்மையாகவே இருந்தனர்.

1968ல், டெரிக்கின் போதனை ஊழியம், உயர்ந்து வரும் கரிஸ்மேட்டிக் இயக்கத்தில் மிக அதிகமாக வளர்ந்தது. அவர் விரிவாக பயணம் செய்து, வார்த்தையை அதிகாரத்துடனும் வல்லமையுடனும் பிரசங்கித்தார்.

அக்டோபர் 5, 1975 அன்று, லிடியா பிரின்ஸ் தனது 85 வது வயதில் குடும்பத்தால் சூழப்பட்டு அமைதியாக காலமானார். அவரது மரணத்திற்கு சற்று முன்பு வெளியிடப்பட்ட "எருசலேமில் நியமனம்" என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆவார்.

ரூத் பிரின்ஸ்

1978ல், டெரிக் தனது இரண்டாவது மனைவியாகிய ரூத் பேக்கர் என்ற அமெரிக்க ஒற்றைத் தாயை திருமணம் செய்து கொண்டார், அவர் மூன்று தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாயாவார். டெரிக், அவர் நண்பர்களுடன் இஸ்ரேலுக்கு வருகை தந்தபோது அவர்கள் எருசலேமில் சந்தித்தனர்.

அவர்கள் இணைந்து பின் ‘டெரிக் பிரின்ஸ் உடன் இன்று’ என்ற தினசரி வானொலி நிகழ்ச்சி தொடங்கப்பட்டதன் மூலம் ஊழியத்தில் ஒரு புதிய கட்டம் உருவானது. முதலில் எட்டு வானொலி நிலையங்களில் ஒலிபரப்பப்பட்ட இந்நிகழ்ச்சியின் மூலம், பார்வையாளர்கள் விரைவாக வளர்ந்தனர் மற்றும் ஊழியத்தின் மரபு உறுதியானது. இன்று, இந்த பதிவுகள் உலகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளன மற்றும் இவை பல்வேறு மொழிகளில் கிடைக்கின்றன.

டெரிக் மற்றும் ரூத்தின் காதல் கதையின் விவரங்கள் 'திருமணத்தை ஏற்படுத்துபவர் தேவன்' என்ற புத்தகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது, இது அவர்கள் இணைந்து உருவாக்கி 1986ல் வெளியிடப்பட்டது.

டெரிக் மற்றும் ரூத் பிரின்ஸ் 1985 இல் ஜாம்பியாவில் உள்ள ஜாம்பேசி நதிக்கு அருகில் ஒரு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர்.

ரூத் 29 டிசம்பர் 1998 அன்று எருசலேமில் காலமானார். அவர் குறுகிய காலமாக நோய்வாய்பட்டு, அந்த நோய் சரியாக கண்டறியப்படாமல் மரித்தார். அவருக்கு வயது 68. டெரிக்குடன் இருபதாண்டுகளுக்கும் மேலாக விசுவாசமாக ஊழியம் செய்திருந்தார்.

துக்கத்தால், டெரிக்கின் இதயத்தில் கசப்பு எழும்ப தொடங்கியது. இறுதியில் கர்த்தரிடமிருந்து தன்னை பிரித்துவைக்கும் ஒரு அசுத்தமான சக்தியை உணர்ந்த அவர், ரூத்தின் இறுதிச் சடங்கில் ஒரு பகிரங்க அறிவிப்பை வெளியிட்டார், அது அவரது மீதமுள்ள ஆண்டுகளை வரையறுக்கும். ரூத்தின் சவ பெட்டகம் இறக்கப்பட்டபோது, ரூத்தின் வாழ்க்கையில் ஆண்டவர் செய்த அனைத்திற்கும் டெரிக் நன்றி கூறினார். தனது பரலோக பிதாவின் மீதான தனது அன்பையும் நம்பிக்கையையும் மனப்பூர்வமாக உறுதிப்படுத்தினார். அந்த தருணத்தை நினைவுகூர்ந்து அவர் பின்னர் கூறினார்:

"இது என் வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க தருணம். ரூத் மீது நான் உணர்ந்த புலம்பலுடன் நான் ஒருபோதும் முன்னோக்கிச் செல்ல முடியாது என்று எனக்குத் தெரியும். நான் எப்போதும் ஆண்டவரை குறை கூறுவேன், என் வாழ்க்கையின் கதவு மூடப்பட்டிருக்கும். நான் தொடர்ந்து ஓடுவதற்கான ஒரே வழி இதுதான்."

இறப்பு

டெரிக் பிரின்ஸ் 24 செப்டம்பர் 2003 அன்று தனது 88வது வயதில் இயற்கையான மரணம் அடைந்தார். அவர் நீண்ட காலமாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு, எருசலேமில் உள்ள தனது வீட்டில் தூக்கத்தில் காலமானார்.

எருசலேமில் உள்ள அலையன்ஸ் சர்ச் சர்வதேச கல்லறையில் புதைக்கப்பட்டார். டெரிக்கின் கல்லறையில் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது:

டெரிக் பிரின்ஸ்
1915 - 2003
வீட்டிற்குச் சென்றுவிட்டார்
வேத போதகர்
கிறிஸ்து இயேசுவில் உள்ள சத்தியத்திலும் விசுவாசத்திலும்
அன்பிலும் அநேகருக்கு
தேவன் உண்மையுள்ளவர்

டெரிக் பிரின்ஸ் 1974 இல் டெக்சாஸின் சான் அன்டோனியோவில் உள்ள டிரினிட்டி தேவாலயத்தில் (இப்போது கார்னர்ஸ்டோன் சர்ச்) பிரசங்கித்தார்.

வேதாகம ஆசிரியர்

1944ல், இஸ்ரவேலின் கிரியாத் மோட்ஸ்கினில் உள்ள ஒரு மருத்துவ விநியோகக் கிடங்கில் நிலைகொண்டிருந்தபோது, தேவன் டெரிக்குடன் தெளிவாகப் பேசினார்:

‘‘நீ கிறிஸ்து இயேசுவில் உள்ள சத்தியத்திலும் விசுவாசத்திலும் அன்பிலும் வேதத்தை அநேகருக்கு போதிக்க அழைக்கப்படுகிறாய்.”

அது டெரிக்கின் தற்போதைய நிலையத்திலிருந்து வேறு ஒரு உலகமாகத் தோன்றியது, ஆனால் காலப்போக்கில் ஆண்டவர் 1941ல் உறுதியளித்ததுப் போலவே நடந்தேறியது:

"அது ஒரு சிறிய நீரோடை போல் இருக்கும். அந்த சிறிய நீரோடை ஒரு நதியாக மாறும். அந்த நதி ஒரு பெரும் நதியாக மாறும். அந்த பெரிய நதி ஒரு கடலாக மாறும். அந்த கடல் ஒரு வலிமையான பெருங்கடலாக மாறும், அது உன் மூலமாக நிகழும்: ஆனால் எப்படி நடக்கும் என்பதை நீ அறிய கூடாது, நீ அறிய முடியாது, நீ அறியவும் மாட்டாய்.’’

இன்றுவரை, டெரிக் பிரின்ஸ் என்ற பெயர் ஆரோக்கியமான உபதேசம் மற்றும் கர்த்தருடைய வார்த்தையின் தெளிவான ஆனால் முறையான போதனையுடன் ஒத்ததாக உள்ளது. வேதவசனங்களைப் படிப்பதில் அவருக்கு இருந்த உறுதியான விசுவாசமும் அர்ப்பணிப்பும் அவரை அவரது காலத்தில் மிகவும் மதிக்கப்பட்ட மற்றும் பாராட்டப்பட்ட வேதாகம போதகர்களில் ஒருவராக மாற்றியது.

டெரிக் 100 க்கும் மேற்பட்ட புத்தகங்களின் ஆசிரியர் ; அவரது வாழ்க்கையின் வேலை மற்றும் ஆர்வத்தை அழியாத கட்டுரைகள், கடிதங்கள், ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகள் மூலம் ஒரு விலைமதிப்பற்ற புதையல் உள்ளது. 100 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, அவைகள் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான கிறிஸ்தவர்களுக்கு உத்வேகம் மற்றும் ஆய்வின் ஆதாரமாக உள்ளனர்.

2003ல் டெரிக் இறப்பதற்கு ஒரு வருடம் முன்பு, ‘‘எருசலேம் போஸ்ட்” பத்திரிகையின் பத்திரிகையாளர் ஒருவர், இன்று திருச்சபையின் மிகப் பெரிய தேவை என்ன என்று கேட்டார். “வேத போதகர்கள்” அதாவது ‘‘தீவிரமான வேத போதகர்கள்” என டெரிக் பதிலளித்தார். இந்த உரையாடலை நினைவுகூர்ந்த பத்திரிகையாளர், 2006-ல் எழுதினார், ‘‘உண்மையில், அவரைப் போன்ற சிலர் தான் இருந்துள்ளனர். ”

டெரிக் பிரின்ஸ் ஊழியங்கள்

மே 1971 இல், டெரிக் அதிகாரப்பூர்வமாக புளோரிடாவின் ஃபோர்ட் லாடெர்டேல்லில் தனது போதனைகளை வெளியிடவும் விநியோகிக்கவும் ஒரு அலுவலகத்தைத் திறந்தார். முதலில் ‘டெரிக் பிரின்ஸ் வெளியீடுகள்’ என்று அறியப்பட்ட இது படிப்படியாக விரிவடைந்து, டிசம்பர் 1990 இல் டெரிக் பிரின்ஸ் ஊழியங்கள்

இன்று, டெரிக் பிரின்ஸ் ஊழியங்கள் ஆஸ்திரேலியா, கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, நியூசிலாந்து, நார்வே, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, சுவிட்சர்லாந்து, ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் அமெரிக்கா உட்பட உலகெங்கிலும் உள்ள 45 க்கும் மேற்பட்ட நாடுகளில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. அது ஆவிக்குரிய பசியுடன் இருப்பவர்களை வளப்படுத்த உறுதியாக உள்ளது. அவ்வாறு செய்வதன் மூலம், ஜூலை 2002 இல் டெரிக் பகிர்ந்து தரிசனத்தை உயர்த்திப் பிடிப்பதில் உறுதியாக உள்ளது:

"அறுபது ஆண்டுகளுக்கு முன்பு தேவன் என் மூலம் தொடங்கியிருக்கிற இந்த ஊழியம் இயேசு திரும்பி வரும் வரை, தன் பணியைத் தொடர வேண்டும் என்பது என் விருப்பம், அது கர்த்தருடைய விருப்பம் என்றும் நம்புகிறேன்."
டெரெக் பிரின்ஸ்
முகப்புப் பக்கம்
வளங்கள்
+
வளங்கள்ஆன்லைன் ஸ்டோர்செய்திஊழிய தளங்கள்
நாங்கள்
+
நன்கொடை
எங்களோடு இணைய
+
தொடர்புக்கு
+
தொடர்புக்கு
White Facebook iconWhite YouTube iconWhite Instagram iconX icon