மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது. வாழ்க்கை எனக்கு கற்றுத்தந்த உண்மைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், அந்த உண்மைகள், என் வாழ்க்கையில் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே வித்தியாசத்தை ஏற்படுத்தியது. அது உங்களுக்கும் அப்படியே செய்யும்.

இந்த வாரம், தீர்க்க முடியாதவைகளை தீர்ப்பதற்கான தேவனின் திறவுகோலான, “பரிந்துபேசும் ஊழியம்” குறித்து நான் பகிர்ந்து கொள்கிறேன். இந்த வாரம், எனது முந்தைய பேச்சுகளில், பரிந்துபேசும் ஊழியத்தின் உதாரணங்களை தேவனின் மூன்று பெரிய ஊழியர்களான ஆபிரகாம், மோசே மற்றும் தானியேல் ஆகியோரிடமிருந்து எடுத்தேன். இந்த பரிந்துபேசும் கலையில் தேர்ச்சி பெற்ற ஆண்களையும், பெண்களையும் குறிக்கும் சில அம்சங்கள் நமது எடுத்துக்காட்டுகளிலிருந்து வெளிவருகின்றன.

உதாரணமாக, சிலவற்றை பட்டியலிடுகிறேன். முதலாவது, தேவனுடனான நெருக்கமான உறவு; இரண்டாவது, தேவனை அணுகுவதில் தைரியம்; மூன்றாவது, தேவன் நீதிமான்களைக் காப்பாற்றுவார், ஆனால் துன்மார்க்கரை நியாயந்தீர்ப்பார் என்ற தேவனின் நேர்மறையான மற்றும் எதிர்மறையான நீதியின்மேல் முழுமையான நம்பிக்கை; நான்காவது, தேவனின் மகிமையில் அக்கறையும், மாறாக, தனிப்பட்ட நலன்கள் மற்றும் லட்சியங்களை அலட்சியம்பண்ணுதல்; ஐந்தாவது, சிங்கத்தின் குகையாக இருந்தாலும், உயிரையும் பாராமல் பணிக்காக அர்ப்பணிப்பு; ஆறாவது, யாருக்காக நாம் பரிந்துபேசுகிறோமோ அவர்களுடன் அடையாளம் காண விருப்பம். இப்படிப்பட்ட ஜெபம் பரிசேயனைப் போல அல்ல, அவன் சொன்னது, “தேவனே, நான் மற்ற மனிதர்களைப் போல் இல்லாததற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்.” இந்த வகையான ஜெபம் நாம் யாருக்காக ஜெபிக்கிறோமோ அவர்களை இப்படியாக அடையாளப்படுத்துகிறது. நாம் சொல்கிறோம், “நாங்கள் பாவம் செய்யவில்லை, அவர்கள் பாவம் செய்திருக்கிறார்கள்.”

இப்போது, பரிந்துபேசும் ஊழியத்தின் நான்காவது உதாரணத்திற்கு, எஸ்தர் ராணியின் கதையை இன்று பார்ப்போம். நாம் பார்க்கப்போகும் சம்பவம் எஸ்தர் புத்தகத்தின் 4ஆவது அதிகாரத்தில் இருந்து எடுக்கப்படுகிறது. ஆனால், முதலில் நாம் சுருக்கமாக வரலாற்று பின்னணியைப் பார்க்க வேண்டும். பெர்சிய ராஜ்யத்தில் யூத மக்கள் தங்கள் தேசத்திலிருந்தும், எருசலேம் நகரத்திலிருந்து சிறைப்பட்ட காலத்தில் எஸ்தர் என்னும் ஒரு அழகான யூத கன்னி இருந்தாள். அவள் ஒரு அனாதையாக இருந்தாள். மொர்தெகாய் என்பவர் தன் சிறிய தகப்பன் குமாரத்தியாகிய எஸ்தரை வளர்த்தான். மொர்தெகாய் பெர்சிய ராஜ்யத்தின் அரசவையில் முக்கிய அதிகாரியாக இருந்தார். ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், எஸ்தர் பெர்சிய ராஜ்யத்தின் புதிய ராணியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும், பேரரசரின் அரண்மனையில் மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்த பதவிக்கு உயர்த்தப்பட்டார். இருப்பினும், எஸ்தர் ஒருபோதும் தான் ஒரு யூதர் என்ற உண்மையை பகிரங்கமாக வெளிப்படுத்தவில்லை.

அவர் ராணியாக உயர்த்தப்பட்ட பிறகு, ஆமான் என்னும் ஒரு குறிப்பிட்ட யூத எதிர்ப்பாளன், பெர்சிய ராஜ்யத்தின் அரசவையில் அதிகாரியாக இருந்தான், அவன் ஒரு சதித்திட்டம் தீட்டினான், ஒரு குறிப்பிட்ட நாளில், பெர்சிய ராஜ்யம் முழுவதிலும் இருக்கும் யூத மக்களுக்கு எதிராக ஒரு திட்டம் போட்டான், அவர்கள் அனைவரையும் அழிப்பதற்காக அரசரின் ஒப்புதலையும் பெற்றான். அவனது திட்டம் முழு யூத தேசத்தின் அழிவான, முழு இனப்படுகொலைக்கு குறைவாக இல்லை. அந்த நேரத்தில், உலகில் உள்ள அனைத்து யூதர்களும் பெர்சிய ராஜ்யத்தின் எல்லைக்குள் வாழ்ந்து கொண்டிருந்தனர். அதனால் ஒரு அவநம்பிக்கையான சூழ்நிலை இருந்தது.

இந்த ஆணை வெளிவந்தவுடன், மொர்தெகாய் ராணியின் அரண்மனையில் இருந்த எஸ்தருக்கு ஒரு செய்தியை அனுப்பினார், அரசனை அணுகி, ஆணையைப் பற்றிய தனது மனதை மாற்றும்படி அவரை அறிவுறுத்துவது அவளுடைய பொறுப்பு என்று கூறினார். எஸ்தர் நீண்ட காலமாகவே ராஜாவை அணுக முடியவில்லை என்ற செய்தியை திரும்ப அனுப்பினாள். பின்னர், எஸ்தர் தனது மக்களின் சார்பாக நிற்க வேண்டும் என்று மொர்தெகாயிடமிருந்து எஸ்தருக்கு மீண்டும் செய்தி வந்தது. அவள் இந்த வார்த்தையை மீண்டும் அனுப்பினாள், நாம் இதனை எஸ்தர் 4:11-17 லிருந்து படிக்கப் போகிறோம்:

11 யாராவது அழைக்கப்படாமல், உள்முற்றத்தில் ராஜாவினிடத்தில் பிரவேசித்தால், புருஷரானாலும் ஸ்திரீயானாலும் சரி, அவர்கள் பிழைக்கும்படிக்கு, அவர்களுக்கு ராஜா பொற்செங்கோலை நீட்டினாலொழிய மற்றபடி சாகவேண்டும் என்கிற ஒரு தவறாத சட்டமுண்டு, இது ராஜாவின் சகல ஊழியக்காரருக்கும், ராஜாவினுடைய நாடுகளிலுள்ள சகல ஜனங்களுக்கும் தெரியும்; நான் இந்த முப்பது நாளளவும் ராஜாவினிடத்தில் வரவழைக்கப்படவில்லை என்று சொல்லச்சொன்னாள். 12 எஸ்தரின் வார்த்தைகளை மொர்தெகாய்க்குத் தெரிவித்தார்கள். 13 மொர்தெகாய் எஸ்தருக்குத் திரும்பச் சொல்லச்சொன்னது; நீ ராஜாவின் அரமனையிலிருக்கிறதினால், மற்ற யூதர் தப்பக்கூடாதிருக்க, நீ தப்புவாயென்று உன் மனதிலே நினைவுகொள்ளாதே. 14 நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள்; நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும், என்று சொல்லச் சொன்னான். 15 அப்பொழுது எஸ்தர் மொர்தெகாய்க்கு மறுபடியும் சொல்லச் சொன்னது: 16 நீர் போய், சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்றுநாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம்பண்ணுங்கள்; நானும் என் தாதிமாரும் உபவாசம் பண்ணுவோம்; இவ்விதமாகச் சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள். 17 அப்பொழுது மொர்தெகாய் புறப்பட்டுப்போய், எஸ்தர் தனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்தான்.

சரி, மீண்டும் ஒரு பரிந்துரையாளரின் தோற்றம் காணப்படுகிறது. உறுதியைக் கவனியுங்கள். “நான் செத்தாலும் சாகிறேன்” நான் வாழ்வேனோ அல்லது இறப்பேனோ என்பது மிக முக்கியமானது அல்ல. எனது மக்கள் சார்பாக என்னால் முடிந்ததைச் செய்கிறேன் என்பதுதான் மிக முக்கியமானது.

மொர்தெகாய் சொன்னதைக் கவனியுங்கள். “நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும்?” இது கிறிஸ்தவர்களாகிய நமக்கு பொருந்தும். நாம் ஆசாரியர்களின் ராஜ்யத்தில் இருக்கிறோம். நாம் இந்த ராஜமேன்மைக்கு வந்துவிட்டோம். நாம் நம்முடைய பொறுப்பிலிருந்து விலகி, எஸ்தரை விட அலட்சியமாக இருக்க முடியாது. தேவனின் மக்களாகிய மற்றவர்களுடன் நம்மை அடையாளப்படுத்த நாம் தயாராக இருக்க வேண்டும். ஏதோ ஒரு அரமணைக்குள் ஒளிந்துகொண்டு, “சரி, இந்த நெருக்கடி என்னைப் பற்றியது அல்ல” என்று நாம் சொல்ல முடியாது. நாம் தானியேலைப் போலவும், எஸ்தரைப் போலவும் இருக்க வேண்டும்; நம் உயிரையும் கொடுக்க தயாராக இருக்க வேண்டும், எல்லாவற்றிற்கும் துணிந்து, தேவனின் மக்களுக்கு ஆதரவாக நின்று, தேவனின் நோக்கங்களுடன் நம்மை அடையாளப்படுத்தி, ஜெபத்தின் பாரத்தை எடுக்க வேண்டும். பின்னர், தானியேலைப் போலவே, எஸ்தரும் ஜெபித்தால் மட்டும் போதாது என்பதை அறிந்திருப்பதைக் கவனியுங்கள். அவள், “நாம் மட்டும் ஜெபித்தால் போதாது, ஆனால், அனைவரும் மூன்று பகலும், மூன்று இரவும் உபவாசம் இருக்க வேண்டும், நாம் உபவாசித்து ஜெபித்தப் பிறகு, நான் ராஜாவிடம் சென்று என்ன நடக்கிறது என்று பார்ப்பேன்” என்று சொன்னாள்.

இப்போது எஸ்தர் எப்படி ராஜாவிடம் சென்றாள் என்பதைப் படிப்போம். எஸ்தர் புத்தகத்தில் 5:1-3ஐ வாசிப்போம்.

1 மூன்றாம் நாளிலே, எஸ்தர் ராஜவஸ்திரந் தரித்துக்கொண்டு, ராஜ அரமனையின் உள்முற்றத்தில், [“உள்முற்றம்” என்ற வார்த்தை எனக்கு பிடித்தமானது; பரிந்துபேசுதல் என்பது எப்போதும் உள்முற்றத்தில் வந்து, தேவனின் உடனடி பிரசன்னத்துக்கு வருவதைக் குறிக்கிறது. அதனால் அவள் அரண்மனையின் உள்முற்றத்தில் நின்றாள்] ராஜா கொலுவிருக்கும் ஸ்தானத்துக்கு எதிராக வந்து நின்றாள்; ராஜா அரமனைவாசலுக்கு எதிரான கொலுமண்டபத்தில் ராஜாசனத்திலே வீற்றிருந்தான். 2 ராஜா ராஜஸ்திரீயாகிய எஸ்தர் முற்றத்தில் நிற்கிறதைக் கண்டபோது, அவளுக்கு அவன் கண்களில் தயை கிடைத்ததினால், ராஜா தன் கையிலிருக்கிற பொற்செங்கோலை எஸ்தரிடத்திற்கு நீட்டினான்; அப்பொழுது எஸ்தர் கிட்டவந்து செங்கோலின் நுனியைத் தொட்டாள். [அவர் இரக்கம் காட்டத் தயாராக இருக்கிறார் என்பதற்கும், அவள் கொல்லப்பட வேண்டும் என்ற சட்டத்தை ராஜா பயன்படுத்தமாட்டார் என்பதற்கும் அதுவே சான்றாகும். எனவே, எஸ்தர் அருகில் வந்து செங்கோலின் நுனியைத் தொட்டாள். அந்தச் செயலால் மன்னர் அளிக்கும் இரக்கத்தைப் பெற்றாள். தேவனின் பிரசன்னத்திற்குச் சென்று, அவர் இரக்கத்தின் செங்கோலை நீட்டும்போது, நாம் செங்கோலின் நுனியைத் தொட வேண்டும் என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று என்று நான் நினைக்கிறேன்.] 3 ராஜா அவளை நோக்கி; எஸ்தர் ராஜாத்தியே, உனக்கு என்னவேண்டும்? நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும், உனக்குக் கொடுக்கப்படும் என்றான்.

அவள் வெற்றி பெற்றிருந்தாள். எஸ்தர் புத்தகத்தின் எஞ்சிய பகுதி, அவளுடைய பரிந்துபேசுதலின் விளைவுகளின் வெளிப்பாடாகும். அதுதான் யூத மக்களுக்கு வெற்றி கிடைத்த கட்டமாகும். நான் நம்புகிறேன், அது எப்போதும் பரிந்துபேசுதலில் வெற்றி பெற்றது. அந்த இடத்தில்தான் வரலாறு படைக்கப்படுகிறது, தேசங்களின் போக்கையும் விதியையும் மாற்றுகிறது, அங்கேதான் நாம் தேவன் விரும்பும் ஆட்சியாளர்களாக மாறுகிறோம்.

எஸ்தரைப் பற்றிய ஒரு அழகான உண்மையை நீங்கள் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், எஸ்தர் ராஜாவிடம் சென்றபோது, அவள் ஒரு பிச்சைக்காரியாக உள்ளே செல்லவில்லை; அவள் அடிமைத்தனமாக நடந்துகொள்ளவில்லை. அவள் தனது ராஜவஸ்திரத்தை தரித்துக் கொண்டாள், அவள் அங்கே ஒரு அழகான ராணியாக அவரது முன்னிலையில் நின்றாள்.

எனவே, எஸ்தர் ஒரு ராணியைப் போல உள்ளே சென்றாள். அவள் ராஜ உடையை அணிந்தாள். அவள் யாரென்பதை உணர்ந்துகொண்டாள். அவள் சரியான நிலையை எடுத்தாள். கிறிஸ்தவர்களாகிய உங்களுக்கும் எனக்கும் இது பொருந்தும் என்று நான் நம்புகிறேன். தேவனின் பார்வையில் நாம் யார் என்பதையும், தேவன் நம்மை உயர்த்திய நிலையையும் நாம் அடையாளம் காண வேண்டும். நாம் அடிமைத்தனமாக இருக்கக் கூடாது. நாம் பிச்சைக்காரராக செல்லக் கூடாது.

ஏசாயா 52 ஆவது அதிகாரத்தில் உள்ள இந்த அழகான வார்த்தைகளைக் கவனியுங்கள்:

1 எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள்; பரிசுத்த நகரமாகிய எருசலேமே, உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக்கொள்; விருத்தசேதனமில்லாதவனும், அசுத்தனும் இனி உன்னிடத்தில் வருவதில்லை. 2 தூசியை உதறிவிட்டு எழுந்திரு; எருசலேமே, வீற்றிரு; சிறைப்பட்டுப்போன சீயோன் குமாரத்தியே, உன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்துவிடு.

அதுதான் நமக்கும், நாம் ஜெபிக்கும் விதத்துக்கும் ஒரு சவால் என்று நான் நம்புகிறேன். நாம் எப்படி இருக்க தேவன் சொல்கிறாரோ நாம் அப்படியாக மாற வேண்டும். நாம் அடிமைத்தனமாக இருக்கக் கூடாது. நாம் தூசியிலிருந்து வெளியேற வேண்டும். நாம் ஜெபத்திலும், பரிந்துபேசுதலிலும் அவருடன் ஆட்சிசெய்யும்படி, தேவன் நமக்கு வழங்கிய சிங்காசனத்தில் நாம் எழுந்து அமர வேண்டும். இந்த வசனம் குறிப்பிடும் சில விஷயங்களைக் கவனியுங்கள். முதலில், நாம் எதை அணியவேண்டும். நாம் வல்லமையையும், அழகையும் அணிய வேண்டும். சங்கீதம் 96: 6 இல் ஒரு அழகான வசனம் உள்ளது, அது சொல்கிறது:

6 மகிமையும் கனமும் அவர் சமுகத்தில் இருக்கிறது, வல்லமையும் மகத்துவமும் அவர் பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது.

அவருடைய உள்பிரகாரங்களாகிய, அவருடைய பரிசுத்த ஸ்தலத்திற்கு பொருத்தமான வல்லமையையும் மகிமையையும் நாம் அணிந்துகொள்ள வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். பின்னர், நாம் அசுத்தங்கள் அனைத்தையும் அகற்ற வேண்டும். விருத்தசேதனம் செய்யப்படாதவர்களும், அசுத்தமானவர்களும் நுழைய மாட்டார்கள் என்று அடையாளமாக அது கூறுகிறது. நாம் பரிசுத்தமாக இருக்க வேண்டும். பின்னர் நம்மை கட்டுகின்ற அனைத்தையும் தூக்கி எறிய வேண்டும். நம் கழுத்தில் உள்ள சங்கிலிகளிலிருந்து நம்மை நாமே அவிழ்த்துக்கொள்ள வேண்டும். நாம் ஜெபத்தில் தேவனிடம் வரும்போது என்ன வகையான சங்கிலிகள் நம்மை பிணைக்கின்றன? அவை சந்தேகம், நம்பிக்கையின்மை, பயம், தவறான அணுகுமுறைகள் மற்றும் உறவுகள் போன்ற சங்கிலிகள் என்று நான் நினைக்கிறேன். இந்த சங்கிலிகளிலிருந்து நாம் விடுபட வேண்டும். பின்னர், நாம் இந்த தீர்க்கமான நடவடிக்கையை எடுக்க வேண்டும். நாம் எழுந்திருக்க வேண்டும், இனி அங்கேயே கிடந்து தலைகுனிந்து இருக்கக் கூடாது. நாம் தேவனிலும், அவரது விதியின்படியும் நாம் எந்த வகையான நபர்களாக இருக்கிறோம் என்பதை உணர வேண்டும். நாம் எப்படி இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறாரோ அப்படியே எழுந்து செயல்படுங்கள்.

இந்த இறுதி தருணத்தில் எஸ்தரின் தோற்றத்திற்கு திரும்புவோம். எஸ்தர், பதவி நீக்கப்பட்ட முந்தைய ராணியான வஸ்தியின் இடத்தைப் பிடித்தாள். வஸ்தி பதவி பறிக்கப்பட்டதற்குக் காரணம் என்னவென்றால், ராஜா ஒரு பெரிய விருந்து நடத்தியபோது, விருந்துபசாரத்தின் உச்சக்கட்டத்தில், ராணியை அவளுடைய முழு அழகில் தன் மக்களுக்கு காண்பிக்க விரும்பினான், அவளோ சொந்த விருந்து வைத்திருந்தாள், அவள் வர மறுத்துவிட்டாள். அதனால் அவள் பதவி நீக்கம் செய்யப்பட்டாள். மேலும், ராணிகளாகிய வஸ்திக்கும் எஸ்தருக்கும் இடையே உள்ள மிக எளிமையான வித்தியாசத்தை உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நான் இதை இவ்வாறு கூறுகிறேன்: வஸ்தி ராஜாவின் விருப்பத்தை விட தனது சொந்த திட்டங்களையும் செயல்களையும் முன் வைத்தாள், ஆனால் எஸ்தர் தனது சொந்த வாழ்க்கையையும் ஆசைகளையும் விட ராஜாவின் விருப்பங்களையும், தனது மக்களின் தேவைகளையும் முன் வைத்தாள்.

இது இன்றைய தேவாலயத்திற்கு பொருந்தும் என்று நான் நம்புகிறேன். பல சமயங்களில், தேவாலயம் வஸ்தியைப் போல, அதன் சொந்த நிகழ்ச்சிகள், அதன் சொந்த திட்டங்கள், அதன் சொந்த ஆர்வத்தில் பரபரப்பாக இருக்கிறது; ராஜா சொல்வதற்கு திறந்திருக்கவில்லை. எஸ்தர் ராணியைப் போல, தேவைப்பட்டால், நமது சொந்த வாழ்க்கைக்கு முன்னால் ராஜாவின் விருப்பத்தையும், சக மனிதர்களின் தேவைகளையும் வைக்கும் ஒரு தேவாலயமாக நாம் மாற வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்.

எஸ்தரின் பரிந்துபேசுதல் வரலாற்றின் போக்கை வடிவமைத்தது என்பதைக் கவனியுங்கள், நீங்களும் நானும் அதையே செய்ய முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இன்றைக்கு நம் நேரம் முடிந்துவிட்டது. நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். இந்தப் பரிந்துபேசுதலின் கருப்பொருளைத் தொடர்கிறேன். அதை எப்படி நம் சொந்த வாழ்வின் நடைமுறையில் பயன்படுத்தலாம் என்பதை நான் உங்களுக்குக் காட்டுகிறேன்.

லைக்
பகிரவும்