விசுவாசம் சோதிக்கப்பட வேண்டும்

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: ஆகஸ்ட் 2026
Read Time: 10
உங்கள் விசுவாசம் ஏன் சோதிக்கப்படுகிறது என்று நீங்கள் யோசித்திருக்கிறீர்களா? டெரெக் பிரின்ஸின் "விசுவாசம் சோதிக்கப்பட வேண்டும்" என்ற செய்தி இதற்குப் பதிலளிக்கிறது. விசுவாசம் சோதிக்கப்படுவதன் அவசியம் மற்றும் அது நமது ஆன்மீக வளர்ச்சியில் வகிக்கும் முக்கிய பங்கு குறித்த விவிலிய உண்மைகளை இதில் அவர் விளக்குகிறார். சோதனை ஏன் நமது விசுவாசப் பயணத்தின் இன்றியமையாத பகுதி என்பதையும், அது கடவுள் மீதான நமது நம்பிக்கையை எவ்வாறு பலப்படுத்தும் என்பதையும் இந்தச் செய்தியின் மூலம் கண்டறியுங்கள்.
Transcript
இன்று மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது. இந்த வாரத்தின் நமது கருப்பொருள் விசுவாசம் ஆகும். விசுவாசத்தில் செய்யவேண்டிய அவசியமான மூன்று பெரிய காரியங்களைப் பற்றி உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன், அவை விசுவாசத்துடன் ஒன்றாகச் செல்ல வேண்டிய மூன்று விஷயங்கள் ஆகும். முதலாவது, விசுவாசம் அறிக்கை செய்யப்பட வேண்டும்; இரண்டாவது, விசுவாசம் செயல்பட வேண்டும்; மூன்றாவது, விசுவாசம் சோதிக்கப்பட வேண்டும்.
நேற்று நான் இரண்டாவது அவசியம் செய்ய வேண்டிய விஷயமாகிய, விசுவாசம் செயல்பட வேண்டும் என்பதைக் கையாண்டேன். இன்று, நான் மூன்றாவதான கட்டாயம் செய்யவேண்டியதற்கு செல்லப் போகிறேன், விசுவாசம் சோதிக்கப்பட வேண்டும். மக்கள் பொதுவாகக் கேட்க விரும்பாத அவசியமான காரியம் இதுதான். இருப்பினும், இது வேதத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது, மேலும், தனிப்பட்ட அனுபவத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமாக, புதிய ஏற்பாட்டின் முக்கிய எழுத்தாளர்கள் மூவரும் நமது விசுவாசம் சோதிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதில் உடன்படுகின்றனர். அந்த மூன்று எழுத்தாளர்கள், பவுல், யாக்கோபு மற்றும் பேதுரு ஆவார்கள். ரோமர் 5ஆம் அதிகாரத்தில் விசுவாச சோதனை பற்றி பவுல் என்ன சொல்கிறார் என்பதை முதலில் பார்ப்போம். ரோமர் 5இன் தொடக்கத்தில், தேவனுடனான நமது உறவில் பவுல் நம் நிலையை நிறுவுகிறார். அவர் கூறுகிறார்:
1 இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப் பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.
பின்னர், அவர் ஒரு செயல்முறையை விவரிக்கும் ஒரு பகுதிக்குச் செல்கிறார், நாம் தேவனுடனான இந்த உறவை அடைந்த பிறகு, அவர், “மேன்மைபாராட்டுதல்” என்ற வாத்தையை மூன்று முறை பயன்படுத்துகிறார். “மேன்மை பாராட்டல்” என்பது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதும், உங்கள் மகிழ்ச்சியை பேச்சில் வெளிப்படுத்துவதாகும். முதல் “மேன்மை பாராட்டல்” ரோமர் 5:2இல் உள்ளது. அவர் சொல்கிறார்:
2….தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம்.
இப்போது அதை புரிந்துகொள்வது எளிதானது. ஒரு நாள் நாம் தேவனுடனும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுடனும், அனைத்து தேவதூதர்களுடனும், அனைத்து மகிமையுடனும், அனைத்து ஆசீர்வாதங்களுடனும் நித்தியத்தைப் பகிர்ந்து கொள்ளப் போகிறோம் என்று நாம் நம்புகிறோம்; அதுதான் நமக்கு முன் வைக்கப்பட்டுள்ள நம்பிக்கை. அந்த நம்பிக்கையில் மகிழ்ச்சியாய் இருப்பது எளிது. ஆனால், அடுத்த முறை பவுல் “மேன்மை பாராட்டல்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தும்போது, அது மிகவும் வித்தியாசமான, ஆச்சரியமான சூழலில் உள்ளது. வசனம் 3இல், அதனைத் தொடர்ந்து அவர் இவ்வாறு கூறுகிறார்:
3 அதுமாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, 4 உபத்திரவங்களிலேயும் மேன்மை பாராட்டுகிறோம். 5 மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவஅன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.
சரி, இது முதல் பார்வையிலேயே ஒரு ஆச்சரியமான வார்த்தையாக இருக்கிறது. உபத்திரவங்களிலேயும் மேன்மை பாராட்டுகிறோம். இது உங்களைப் பொறுத்தவரை உண்மையா என்று ஆச்சரியமாக இருக்கிறது, உங்கள் இன்னல்களில் நீங்கள் மேன்மை பாராட்டுகிறீர்களா? அந்த பாடத்தை இன்னும் கற்றுக்கொள்ளாத நிறைய விசுவாசிகளை நான் அறிவேன். இருப்பினும், உண்மையில், பவுல், யாக்கோபு மற்றும் பேதுரு ஆகிய அனைவரும், உபத்திரவம் மேன்மை பாராட்டுதலுக்கும், மகிழ்ச்சிக்கும் ஆதாரமாக இருக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.
உபத்திரவங்களில் நாங்கள் மேன்மைபாராட்டுகிறோம் என்று பவுல் ஏன் கூறுகிறார்? ஏனெனில் நம் வாழ்வில் தேவன் விரும்புவதை நிறைவேற்றுவதற்கான ஒரு செயல்முறையின் ஒரு பகுதியாக உபத்திரவம் இன்றியமையாததாக இருக்கிறது. செயல்முறையின் வரிசையைக் கவனியுங்கள்: உபத்திரவம் பொறுமையை உருவாக்குகின்றன, பொறுமை அல்லது உறுதிப்பாடு அல்லது சகிப்புத்தன்மையை (நீங்கள் அதை என்னவென்று அழைக்க விரும்பினாலும்) உருவாக்க வேறு வழியில்லை, ஆனால் விசுவாசத்தின் சோதனையைக் கடந்து செல்கிறது. பொறுமை நிரூபிக்கப்பட்ட குணத்தை உருவாக்குகிறது. வெறும் வாய்மொழி அறிக்கை அல்ல, மதச் செயல்கள் மட்டுமல்ல, ஆனால் சோதனையில் (பரீட்சையில்) நின்ற ஒரு குணமாகும். நிரூபிக்கப்பட்ட குணம் நம்பிக்கையின் அடிப்படையாகும், தேவனுடைய நன்மைக்கான உறுதியான தொடர்சியான ஒரு எதிர்பார்ப்பாகும். மேலும், நம்பிக்கையானது நம் இதயங்களில் தேவனுடைய அன்பின் வெளிப்பாட்டிற்கு நம்மை வழிநடத்துகிறது. நம் இதயங்களில் தேவனுடைய அன்புதான் இறுதி நோக்கம் என்பதை நாம் காண்கிறோம், ஆனால் தேவன் நம் செவிகளில் வைக்க விரும்பும் அனைத்து அன்பையும் பெறுவதற்கும், உள்ளடக்குவதற்கும் நம் இதயங்களை தயார்படுத்துவதற்கு ஒரு செயல்முறை தேவைப்படுகிறது.
பின்னர், ரோமர், அதே ஐந்தாவது அதிகாரம் வசனம் 11இல், பவுல் மூன்றாவது முறையாக “மேன்மை பாராட்டுகிறோம்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். அவர் கூறுகிறார்:
11 அதுவுமல்லாமல், இப்பொழுது ஒப்புரவாக்குதலை நமக்குக் கிடைக்கப்பண்ணின நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துமூலமாய் நாம் தேவனைப்பற்றியும் மேன்மை பாராட்டுகிறோம்.
இது கிறிஸ்தவ வாழ்க்கையின் உச்சக்கட்டம், அது தேவனுக்குள் மேன்மைப் பாராட்டுவதாகும். இது உங்கள் முதன்மையான மகிழ்ச்சியை உங்கள் அனுபவங்களிலோ, ஆசீர்வாதங்களிலோ, வரங்களிலோ கண்டறிவதல்ல, மாறாக, தேவனுக்குள்ளே கண்டறிவதாகும். தேவன் நம்மை வழிநடத்திய இடம் அதுதான். அவர் அதை உபத்திரவத்தின் மூலம், சோதனைகளின் மூலம் செய்யப் போகிறார். இந்த சோதனைகள் தேவனுடைய அன்பின் முழுமையைப் பெறக்கூடிய ஒரு குணத்தை நம்மில் உருவாக்கப் போகிறது, அது தேவனையே நமது முக்கிய மகிழ்ச்சியாக தொடர்புபடுத்துகிறது, நமது விசுவாசத்தின் மையமாகவும், நமது முழு ஆவிக்குரிய வாழ்க்கையும் சுழலும் மையமாகவும் இருக்கிறது. அதுவே தேவனுடைய குறிக்கோள் ஆகும், மேலும் அவர் நம்முடைய விசுவாசத்தின் சோதனைகள் மூலம் நம் வாழ்வில் அதைச் செயல்படுத்துகிறார்.
இப்போது, யாக்கோபு என்ன சொல்லுகிறார் என்பதைக் கேட்போம். இது யாக்கோபு 1:2-4இல், உள்ள அந்த வசனத்துடன் சரியாக ஒத்துப்போகிறது:
2 என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, 3 ……அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.
அதே கருப்பொருள் இருக்கிறதைக் கவனியுங்கள். நீங்கள் பல்வேறு சோதனைகளைச் சந்திக்கும்போது, நீங்கள் என்ன செய்வீர்கள், குறைசொல்கிறீர்களா? விட்டுவிடுகிறீர்களா? என்ன தவறு நடந்தது என்று ஆச்சரியப்படுகிறீர்களா? இல்லை, யாக்கோபு கூறுகிறார், “எல்லாவற்றையும் சந்தோஷமாக எண்ணுங்கள்.” பவுல் சொன்னதுபோல், “நாங்கள் மேன்மைப் பாராட்டுகிறோம்.” யாக்கோபு ஏன் எல்லாவற்றையும் மகிழ்ச்சியாக எண்ணவேண்டும் என்று கூறுகிறார்? சரி, அவர் தொடர்ந்து கூறுகிறார்:
3 உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை [ரோமர் 5இல் பொறுமை என்று மொழிபெயர்க்கப்பட்ட அதே வார்த்தை இதுதான்: உங்கள் விசுவாசத்தின் சோதனை சகிப்புத்தன்மையை உருவாக்குகிறது.] உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள். 4 நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது.
சரி, அதுதான் குறிக்கோள் ஆகும். நாம் எதிலும் குறையில்லாமல் பரிபூரணமாகவும், நிறைவாகவும் இருப்பதற்காகவே, தேவன் வேலை செய்கிறார். எனவே, நம்மை நிறைவாகவும், பூரணமான நிலைக்குக் கொண்டு வருவதற்காகத்தான் தேவன் வேலை செய்கிறார் என்பதை நாம் உணரும்போது, நம்முடைய குணத்தின் ஒவ்வொரு பகுதியும் ஒழுங்காக இருக்கும் இடத்திலும், நம்முடைய ஒவ்வொரு பகுதியும் அவருடைய ஏற்பாட்டை அனுபவிக்கும் இடத்திலும் நாம் இருப்போம். சோதனைகள் மற்றும் உபத்திரவங்கள் வழியாக கடந்து செல்வதன் அர்த்தத்தை அறிந்துகொண்டால், அதை மகிழ்ச்சியாக ஏன் எண்ண வேண்டும் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். சோதனைகளை அனுபவித்து மகிழ்கிறோம் என்பதல்ல, சோதனைகள் மூலம் தேவன் நம்மில் எதை அடைகிறார் என்பதை நாம் அனுபவிக்கிறோம். இந்த சோதனைகளின் விளைவாக யாக்கோபு கூறும் இறுதி நோக்கத்தை மீண்டும் பார்ப்போம், “ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி.” குறைவில்லாமல், பூரணமாக, நிறைவுள்ளதாக இருப்பதற்கு வழி அதுதான் என்றால், நான், தேவனுக்கு முன்பாக வணங்கி, “ஆண்டவரே, என்ன சோதனைகள் அல்லது உபத்திரவங்கள் தேவைப்பட்டாலும், நான் உம்மை நம்புவேன். என்னால் தாங்கக்கூடியவற்றிற்கு மேல் அல்லது தேவையானதற்கு மேல் என்னை சோதிக்க மாட்டீர் என்று நான் நம்புகிறேன். சோதனையில் நான் மேன்மைப் பாராட்டுவேன், நான் உம்மை நம்புவதால் அதை மகிழ்ச்சியாக எண்ணுவேன். எனது சிறந்த நலன்களை நீர் இதயத்தில் வைத்திருப்பதாக நான் நம்புகிறேன், மேலும், என்னால் முடிந்த சிறந்ததை எப்படி உருவாக்குவது என்பதும் உமக்குத் தெரியும்.”
நம்முடைய விசுவாசத்தின் பலன்கள் சோதிக்கப்படுவதைப் பற்றி, பவுலும் யாக்கோபும் என்ன சொன்னார்கள் என்பதை நாம் பார்த்தோம். இப்போது பேதுரு சொல்லும் விஷயத்திற்கு வருவோம். 1 பேதுரு 1:5-7இல், பேதுரு இங்கே கிறிஸ்தவர்களை பின்வருமாறு விவரிக்கிறார்:
5 கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சுதந்தரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
விசுவாசம் எவ்வளவு முக்கியமானது என்பதைக் கவனியுங்கள், ஏனென்றால் நம் விசுவாசத்தின் மூலம் தேவனுடைய வல்லமை நம்மைப் பாதுகாக்கவும், தேவன் நமக்கு முன்னால் வைத்திருப்பதற்காகவும் நம் வாழ்வில் அது செயல்படுகிறது. விசுவாசம் இல்லாமல், நம்மைப் பாதுகாக்கவும், நம்மைக் காக்கவும், வரவிருக்கும் விஷயங்களுக்கு நம்மைத் தயார்படுத்தவும், தேவனுடைய வல்லமை நம் வாழ்வில் செயல்பட முடியாது. பின்னர், இந்த இரட்சிப்பைப் பற்றி பேசுகையில், பேதுரு தொடர்ந்து கூறுகிறார்:
6 இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள். 7 அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப் பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.
மீண்டும், பேதுரு நாம் பல்வேறு சோதனைகளை சந்திக்க நேரிடலாம், அவை நம்மைத் துன்புறுத்தக்கூடும் என்று குறிப்பிடுகிறார், ஆயினும்கூட, நம் இதயங்களில் ஆழமாக, நமது நித்திய அசைக்க முடியாத இரட்சிப்பில் இந்த மகிழ்ச்சி இன்னும் இருக்கிறது. சோதனையின் நோக்கம் நமது விசுவாசத்தை நிரூபிப்பதாகும். பேதுரு “சோதிக்கப்படுதல்” என்ற வார்த்தையை உலோகங்களைச் சுத்திகரிப்பதில் பயன்படுத்துவதைப் போலவே பயன்படுத்துகிறார். வேதாகமக் காலங்களில் விலைமதிப்பற்ற உலோகங்கள், குறிப்பாக தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை நெருப்பால் சுத்திகரிக்கப்பட்டன என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். அது வேலை செய்யும் விதம் இதுதான்: சுத்திகரிக்கப்பட வேண்டிய உலோகம் ஒருவித கொள்கலத்தில் வைக்கப்படும், அந்த கொள்கலம் ஒரு நெருப்பின் மீது வைக்கப்பட்டு, அந்த நெருப்பு மிகப்பெரிய வெப்பத்திற்கு உயர்த்தப்படும். பின்னர், அந்த மிகப்பெரிய சூடான நெருப்பின் மீது கொள்கலனில், உலோகம் (அது தங்கமாக இருந்தாலும் அல்லது வெள்ளியாக இருந்தாலும்) உருகும். அது உருகி திரவமாக மாறியதும், அதில் உள்ள அசுத்தங்கள், கசடுகள் மேற்பரப்புக்கு வந்து, சுத்திகரிப்பு பாத்திரத்தின் மீது ஒட்டிக்கொண்டு அசுத்தங்களை வெளியேற்றுகிறது. மேலும், அசுத்தங்கள் எதுவும் மேற்பரப்பில் வராத வரை அந்த அசுத்தங்கள் வெளியேறும் செயல்முறையைத் தொடரவேண்டும், பின்னர், உலோகம் சுத்தமாக்கப்பட்டது, அது நிரூபிக்கப்பட்டது, அது உண்மையான அங்கீகரிக்கப்பட்ட மதிப்புள்ள தங்கம் அல்லது வெள்ளியாக மாற்றப்பட்டது. முயற்சிக்கப்படாத தங்கத்துக்கும், முயற்சிக்கப்படாத வெள்ளிக்கும் அங்கீகரிக்கப்பட்ட மதிப்பு இல்லை.
சரி, கர்த்தர் நம்மோடு இப்படித்தான் நடந்துகொள்கிறார் என்று வேதம் கூறுகிறது. மல்கியா 3:2-3இல் உள்ள ஒரு அழகான காட்சி, மேசியாவின் வருகையைப் பற்றி பேசுகிறது:
2 ஆனாலும் அவர் வரும் நாளைச் சகிப்பவன் யார்? அவர் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய அக்கியைப்போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப் போலவும் இருப்பார். 3 அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக்கொண்டிருப்பார்; அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து, அவர்கள் கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கும், நீதியாய்க் காணிக்கையைச் செலுத்தும்படிக்கும், அவர்களைப் பொன்னைப் போலவும் வெள்ளியைப்போலவும் புடமிடுவார்.
ஆகவே, வெள்ளியைச் சுத்திகரிப்பவர், அந்தப் பாத்திரத்திலுள்ள வெள்ளியைக் கையாள்வது போல, கர்த்தர் தம்முடைய ஜனங்களோடு இடைபடப்போகிறார். வெள்ளியின் சுத்திகரிப்புக்கு, அது மிகப்பெரிய வெப்பத்திற்கு வெளிப்படுவது அவசியமானது. வெப்பமானது உலோகம் உருகுவதற்கும், அசுத்தங்கள் மேற்பரப்பில் வருவதற்கும் காரணமாகிறது, அவை மேற்பரப்புக்கு வரும்போது, சுத்திகரிப்பாளரால் அவற்றை அகற்றி உலோகத்தை சுத்திகரிக்க முடியும். உலோகம் முற்றிலும் தூய்மையானது என்பது சுத்திகரிப்பாளருக்கு தெரியும் என்று யாரோ ஒருவர் கூறினார், ஏனெனில், அவர் உலோகத்தின் மேற்பரப்பைப் பார்த்தபோது, அது தன் சொந்த அம்சங்களைத் துல்லியமாகப் பிரதிபலித்தது. பிரதிபலிப்பு துல்லியமாக இருக்கும்போது, உலோகத்தில் அதிக அசுத்தங்கள் இல்லை என்பதை அவர் அறிந்துகொள்வார்.
மேலும், நிச்சயமாக, கர்த்தர் நம்மோடு இப்படித்தான் நடந்துகொள்கிறார். நாம் சுத்திகரிப்பின் பாத்திரத்தில் இருக்கிறோம், நாம் நெருப்புக்கு மேலே இருக்கிறோம்; ஆனால் அவர் அன்பிலும் இரக்கத்திலும் நம்மீது வளைந்து கொடுக்கிறார், அவர் எந்த விதமான சிதைவு அல்லது அசுத்த தன்மையும் இல்லாமல் நம்மில் இருந்து பிரதிபலிக்கும் அவரது உருவத்தை பார்க்கும் வரை அவர் காத்திருக்கிறார்.
முடிவில், ஏசாயா 48:10இல் ஒரு அழகான வசனத்தை உங்களுக்கு தருகிறேன், அங்கு கர்த்தர் தம்முடைய மக்களிடம் கூறுகிறார்:
10 இதோ, உன்னைப் புடமிட்டேன்; ஆனாலும் வெள்ளியைப்போலல்ல, உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்து கொண்டேன்.
அன்பான நண்பர்களே, துன்பத்தின் உலையில்தான் தேவன் நம்மைச் சோதித்து, நம்மைச் சுத்திகரித்து, அவருடைய சாயலைப் பிறப்பிக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, நீங்கள் உலைக்குள் இருந்தால், குறைசொல்லாதிருங்கள். கர்த்தர் உங்களுக்குச் சிறந்ததைச் செய்கிறார் என்று சந்தோஷப்பட்டு அவரை நம்புங்கள்.
சரி, இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது, ஆனால் நாளை இந்த நேரத்தில் உங்களுடன் மீண்டும் வருவேன். நாளை, விசுவாசம் பற்றிய எனது இறுதிப் பேச்சில், நான் மீண்டும் ஒருமுறை விசுவாசத்துக்கு நேர்மாறாக இருக்கிறதான அவிசுவாசத்துக்கு மறுபடியும் செல்லப் போகிறேன். மனிதனின் வீழ்ச்சிக்கு அவிசுவாசம் எப்படி காரணமாக இருந்தது என்பதை நான் உங்களுக்குக் காட்டப் போகிறேன்.
குறியீடு: RP-R029-104-TAM









