தேவன் தம்முடைய வார்த்தையின் வாக்குத்தத்தங்களில் நமக்காக வழங்கியிருக்கும் அளவற்ற சுதந்தரத்தை ஒன்றாக ஆராய்வதில் இன்று மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது.

சங்கீதம் 1:1-3 இல் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் செழிப்புக்கான முற்றிலும் பொதுவான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய வாக்குத்தத்தத்தை நேற்று பார்த்தோம். இன்று நான் ஆசீர்வாதம் மற்றும் செழிப்புக்கான வேறு சில வாக்குத்தத்தங்களைப் பார்க்கப் போகிறேன், அவை ஒரு குறிப்பிட்ட வேதப்பூர்வமான நிபந்தனையுடன் இணைக்கப்பட்டுள்ளன.

இன்று நாம் பார்க்கப்போகும் வேதாகமத்தின் முதல் பகுதி மல்கியா 3:7-12 இல் உள்ளது. மல்கியா புத்தகத்தின் பின்னணியை நாம் சுருக்கமாகப் புரிந்துகொள்ள வேண்டும். மல்கியா என்பவர் பழைய ஏற்பாட்டின் கடைசி தீர்க்கதரிசி ஆவார். ஏறக்குறைய 1200 ஆண்டுகளுக்கு முன்பு, மோசேயின் மூலம் தேவன் தம் மக்களை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குக் கொண்டுவந்து அவர்களுக்கு ஒரு வாழ்க்கை முறையைக் கொடுத்தார், அவர்கள் அந்த வாழ்க்கை முறையை கடைப்பிடித்து, அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால், அவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள், வேறு எந்த தேசமும் ஆசீர்வாதத்தையும் செழிப்பையும் அறிந்திருக்காத அளவுக்கு செழிப்புடன் இருப்பார்கள் என்று அவர்களுக்கு வாக்களித்தார். அவருடைய நிபந்தனைகளையும், அவருடைய கட்டளைகளையும் அவர்கள் கடைப்பிடிக்காவிட்டால், அவர்கள் எதிர்மாறாக பாதிக்கப்படுவார்கள்; அவர்கள் இழப்பு, தீங்கு, தோல்வி, மற்றும் வறுமை ஆகியவற்றை அனுபவிப்பார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.

இப்போது, மல்கியா புத்தகத்தில், இஸ்ரவேலின் வரலாற்றின் 1200 ஆண்டுகளை தேவன் சுருக்கமாகக் கூறுகிறார். துரதிர்ஷ்டவசமாக, மொத்தத்தில், இந்த சுருக்கம் நம்பிக்கை இழக்கச்செய்கிறது, ஏனென்றால், பெரும்பாலும், அவர்கள் அவருடைய நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யத் தவறிவிட்டார்கள் என்றும், அதனால் அவர்களுக்குக் கிடைக்க அவர் விரும்பிய ஏற்பாட்டின் ஆசீர்வாதங்களை அனுபவிக்கத் தவறிவிட்டார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். நாம் இப்போது படிக்கப்போகும் வசனங்களில், அவருடைய நிபந்தனையை அவர்கள் சந்திக்கத் தவறிய ஒரு குறிப்பிட்ட வழியை அவர் சுட்டிக்காட்டுகிறார். நாம் இப்போது மல்கியா 3:7-12 ஐப் படிக்கப் போகிறோம்:

7 நீங்கள் உங்கள் பிதாக்களின் நாட்கள் தொடங்கி என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், அவைகளைவிட்டு விலகிப்போனீர்கள்; [நீங்கள் காணலாம், இது இஸ்ரேல் வரலாற்றின் கண்ணோட்டமாகும்.] என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; நாங்கள் எந்த விஷயத்தில் திரும்ப வேண்டும் என்கிறீர்கள். [இது இஸ்ரவேலரின் வாயில் வைக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட கேள்வி, “தேவனே, நாங்கள் எந்த விஷயத்தில் திரும்ப வேண்டும் என்கிறீர்?” தேவன் தனது பதிலில் மிகவும் குறிப்பாக இருக்கிறார்.] 8 மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள்? தசமபாகத்திலும் காணிக்கைகளிலுந்தானே [விடை தெளிவாக இருக்கிறது!].

எனவே, நமது நிதியிலிருந்து அவருக்கு கொடுக்காமல் இருப்பது, அவரைக் கொள்ளையடிப்பதாகும். மேலும், குறிப்பிட்ட வகையில், இஸ்ரவேலர் தசமபாகம் மற்றும் அவர்களின் பங்களிப்புகளை நிறுத்திக் கொண்டு தேவனைக் கொள்ளையடித்து வந்தனர். விளைவு: ஒரு ஆசீர்வாதத்திற்கு பதிலாக ஒரு சாபம் இருந்தது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இதில் ஒன்று அல்லது மற்றொன்று இருக்கிறதை நான் உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இதில் ஆசீர்வாதம் அல்லது சாபம் இருக்கும், இதற்கு இடையில் எதுவுமில்லை. கீழ்ப்படிதல் ஆசீர்வாதத்தை கொண்டு வருகிறது, கீழ்ப்படியாமை சாபத்தைத் தருகிறது. எனவே, தேவன் சொல்கிறார்:

9 நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; ஜனத்தாராகிய நீங்கள் எல்லாரும் என்னை வஞ்சித்தீர்கள். [இப்போது, தேவன் அவர்களுக்கு தீர்வைக் கொடுக்கிறார்.]
10 என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படி தசமபாகங்களையெல்லாம், பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். [இஸ்ரவேலைச் சோதிக்கும்படி தேவன் ஒரு வழியை நியமிக்கிறார். அவர் சொல்கிறார், “நான் கேட்பதை நீங்கள் செய்வீர்கள் என்றால், நான் என்ன செய்வேன் என்று நீங்கள் பார்க்கலாம்.”]

ஒவ்வொரு தேவையும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். வானத்தின் பலகணிகளை (ஜன்னல்கள்) பற்றி தேவன் சொல்லும்போது, வானத்தின் பலகணிகளை (ஜன்னல்கள்) தேவனின் ஒரே கட்டுப்பாட்டில் உள்ளன என்பது தெளிவாகிறது. பரலோகத்தை அடைவதற்கும், ஜன்னல்களைத் திறப்பதற்கும் நமக்கு எந்த வழியும் இல்லை, அது தேவனால் மட்டுமே செய்யக்கூடிய ஒன்றாகும். தேவன் அதைச் செய்யாவிட்டால், அது நடக்காது. ஆனால், தேவன் சொல்கிறார், “பூமியில் நான் உங்களிடம் கேட்கும் எளிய காரியத்தை நீங்கள் செய்தால், தசமபாகம் அனைத்தையும் களஞ்சியத்தில் (பண்டசாலையில்) கொண்டுவந்தால், உங்களால் செய்ய முடியாத காரியத்தை நான் பரலோகத்தில் செய்வேன், நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிப்பேன்.” வசனம் 11:

11 பூமியின் கனியைப் பட்சித்துப் போடுகிறவைகளை உங்கள் நிமித்தம் கண்டிப்பேன்; அவைகள் உங்கள் நிலத்தின் பலனை அழிப்பதில்லை, வெளியிலுள்ள திராட்சக்கொடி பழமில்லாமற்போவதுமில்லை என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 12 அப்பொழுது எல்லா ஜாதிகளும் உங்களைப் பாக்கியவான்கள் என்பார்கள்; தேசம் விரும்பப்படத்தக்கதாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

எனவே, தேவன் கணக்கீடு செய்கிறார், அவர் இஸ்ரேலின் வரலாற்றை மறுபரிசீலனை செய்கிறார், மேலும் அவர்கள் அவருடைய நிபந்தனைகளைச் சந்திக்கத் தவறிவிட்டார்கள் என்பதையும், அதனால் அவருடைய ஆசீர்வாதங்களை அனுபவிக்காமல் விட்டார்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். அவர்கள் தசமபாகம் மற்றும் அவர்களின் பங்களிப்புகளை அவரிடம் கொண்டுவர வேண்டும் என்று அவர் வகுத்த ஒரு பெரிய அடிப்படை நிபந்தனையை அவர் அவர்களுக்கு நினைப்பூட்டுகிறார்.

இந்த அடிப்படையில் தேவன் வாக்குக்கொடுத்த ஆசீர்வாதங்கள் என்னவென்று பார்ப்போம். முதலாவதாக, “நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து ஆசீர்வாதத்தைப் பொழிவேன்” என்று கூறுகிறார். தேவன் மட்டுமே வானத்தின் பலகணிகளைத் திறக்க முடியும் என்பதை நான் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கிறேன். இரண்டாவதாக, “பட்சித்து போடுகிறவைகளை கண்டிப்பேன்.” உங்கள் செழிப்பையும், உங்கள் ஆரோக்கியத்தையும், உங்கள் நல்வாழ்வையும் உண்ணுகிற அனைத்தையும், விழுங்கும் ஒவ்வொரு செல்வாக்கையும், சக்தியையும் நான் கையாளுவேன். இனியும் அது தின்ன முடியாது என்று சொல்கிறார். மூன்றாவதாக, “எல்லா ஜாதிகளும் உங்களைப் பாக்கியவான்கள் என்பார்கள்.” தேவனுடைய மக்கள் மற்ற எல்லா மக்களுக்கும் தேவனின் உண்மைத்தன்மைக்கு சாட்சியாக இருப்பார்கள்.

ஆகாய் 1 இல் அங்கு தேவன் இஸ்ரவேலுக்கு சொல்வதோடு ஒப்பிடுங்கள். மீண்டும், அடிப்படையில், அவர் அதே விஷயத்திற்காக அவர்களைக் கண்டிக்கிறார், அவர்களது பணத்தில் அவருக்கு முதலிடம் கொடுக்கவில்லை. அவர் இதைத்தான் சொல்கிறார்:

5 இப்போதும் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள். 6 நீங்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக்கொண்டுவருகிறீர்கள்; நீங்கள் புசித்தும் திருப்தியாகவில்லை; குடித்தும் பரிபூரணமடையவில்லை; நீங்கள் வஸ்திரம் உடுத்தியும் ஒருவனுக்கும் குளிர்விடவில்லை; கூலியைச் சம்பாதிக்கிறவன் பொத்தலான பையிலே போடுகிறவனாய் அதைச் சம்பாதிக்கிறான்.

உங்கள் பணத்தைப் பற்றி நீங்கள் எப்போதாவது இவ்வாறு உணர்ந்திருக்கிறீர்களா, உங்கள் பணப்பையில் நீங்கள் போட்ட பணம் எல்லாம் எப்படியோ ஒரு ஓட்டை வழியாக நழுவிப் போய்விட்டதா, அதனால் உங்களுக்கு பலன் கிடைக்கவில்லையா? தேவன் அதை இஸ்ரவேலரிடம் அப்படிக் கூறுகிறார், மேலும் அவர் சொல்கிறார்:

7 உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 8 நீங்கள் மலையின்மேல் ஏறிப்போய், மரங்களை வெட்டிக்கொண்டு வந்து, ஆலயத்தைக் கட்டுங்கள்; அதின் பேரில் நான் பிரியமாயிருப்பேன், அதினால் என் மகிமை விளங்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

தேவன் சொல்கிறார், “நான் உங்களிடம் கேட்பதைச் செய்யுங்கள், உங்கள் பணப்பையில் துளைகளை உருவாக்கி, உங்கள் வாழ்வாதாரத்தையும் உங்கள் வருமானத்தையும் சாப்பிடும் அந்த காரியத்தை நான் கவனித்துக் கொள்கிறேன்.” வசனம் 9:

9 அதிகமாய் வருமென்று நீங்கள் எதிர்பார்த்திருந்தும், இதோ, கொஞ்சம் கிடைத்தது; நீங்கள் அறுத்து வீட்டுக்குக் கொண்டுவந்தும், நான் அதை ஊதிபோடுகிறேன்….

இந்த சமகால நாட்களில், குறிப்பாக பணவீக்கத்தின் இந்த நாட்களில் அது பலருக்கு நடக்கிறது அல்லவா? நாம் அதிகம் தேடுகிறோம், ஆனால் அது எப்படியோ சிறியதாக மாறி, வீட்டிற்கு வந்ததும், நாம் அதைச் சுற்றி செல்ல முடியாது. தேவன் ஒரு காரணம் சொல்கிறார்: நீங்கள் எனக்கு முதலிடம் கொடுக்கவில்லை, இதன் விளைவாக, நான்:

11 நான் நிலத்தின்மேலும், மலைகளின்மேலும், தானியத்தின்மேலும், புது திராட்சரசத்தின்மேலும், எண்ணெயின்மேலும், பூமியில் விளைகிற எல்லாவற்றின்மேலும், மனுஷரின் மேலும், மிருகங்களின் மேலும், கைப்பாடு அனைத்தின்மேலும் வறட்சியை வருவித்தேன் என்றார்.

ஆகாயின் நாட்களிலும், மல்கியாவின் நாட்களிலும் இஸ்ரவேல் செய்த பெரிய தவறு என்ன? சாராம்சத்தில், அவர்கள் தங்கள் பணத்தில் (நிதிகளில்) தேவனுக்கு முதலிடம் கொடுக்கவில்லை. அவர்கள் தங்கள் சொந்த காரியத்தைச் செய்ய முயன்றனர். அவர்கள் நாம் சொல்வது போல், “முதலில் நம்முடைய தேவை” என்று சொல்கிறார்கள், தேவனையோ புறக்கணித்தார்கள். இதன் விளைவாக, அவர்கள் கடினமாக உழைத்து போதுமான பணம் சம்பாதிப்பது போல் தோன்றினாலும், அவர்கள் சுற்றிச் செல்ல போதுமானதாக இல்லை. இது மிகவும் பரிச்சயமாக இருக்கிறதா? அப்படிப்பட்டவர்களை இன்று சந்திக்கிறீர்களா? ஒருவேளை நீங்கள் அந்த நபர்களில் ஒருவரா?

சரி, இதில் தேவனின் தீர்வு இங்கே உள்ளது: “முழு தசமபாகத்தையும் களஞ்சியத்தில் கொண்டு வந்து சேருங்கள், இதில் என்னை சோதித்துப் பாருங்கள்.”

தசமபாகம் என்றால் என்ன என்பதை நான் சரியாக விளக்க வேண்டியிருக்கலாம். இது ஒரு பழைய ஆங்கில வார்த்தையாகும், பத்தில் ஒன்று என்பதாகும். தசமபாகம் என்பது நாம் பெறும் வருமானத்தில் முதல் பத்தில் ஒரு பங்கை தேவனுக்குக் கொடுப்பதாகும். மேலும், இது முதன்மையானது என்பது முக்கியமாகும். மீதிப் பணத்தை வைத்து வேறு எதையும் செய்வதற்கு முன்பு, அதை ஒதுக்கி வைப்பதாகும். தேவன் சொல்கிறார், “முழு தசமபாகத்தையும் என்னிடம் கொண்டு வாருங்கள், உங்கள் தசமபாகத்தைப் பற்றி ஏமாற்றாதீர்கள், உங்கள் நிதி மற்றும் பொருளாதார தேவைகளை நான் பார்த்துக் கொள்கிறேன்.”

நான் இதைச் சொல்ல விரும்புகிறேன்: தசமபாகம் எளிமையானது, அது வேதப்பூர்வமானது, அது குறிப்பிட்டதாகும்; அது சிக்கலானது அல்ல. எவராலும் பத்தால் வகுக்க முடியும். எந்த ஒரு பண அமைப்பிலும், அது பதின்ம முறையில் (தசம முறையில்), தசம புள்ளியை இடது பக்கத்திலிருந்து ஒரு இடம் நகர்த்தி வைப்பதாகும். நீங்கள் $320.00 சம்பாதித்தால், உங்கள் தசமபாகம் $32.00 ஆகும். நீங்கள் $514.00 சம்பாதித்திருந்தால், உங்கள் தசமபாகம் $51.40 ஆகும். இது கடினமானது அல்ல. இது எளிமையானது, இது வேதப்பூர்வமானது, இது குறிப்பிட்டதாகும். பல வருட அனுபவத்தின் அடிப்படையில் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன் – அது வேலை செய்கிறது.

நீங்கள் பார்க்கலாம், எல்லாவற்றிலும் நாம் தேவனை மதிக்கிறோம் என்பதே அந்த கொள்கையாகும். நாம் தேவனுக்கு முதலிடம் கொடுக்கிறோம், அதில் நமது நிதி மற்றும் செல்வமும் அடங்கும். நீதிமொழிகள் 3:9-10 கூறுகிறது:

9 உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு. 10 அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும்.

கவனியுங்கள், நமது நிதியில் தேவனை முதன்மைப்படுத்தும்போது, நாம் அவரைக் கனப்படுத்துகிறோம். மோசேயின் சட்டத்தின் கீழ் தசமபாகம் நிறுவப்படவில்லை. இப்படி பலர் நினைக்கிறார்கள். தசமபாக முறை ஆபிரகாமில் இருந்து தொடங்கியது. ஆதியாகமம் 14:18-20 இல், வேதத்தில் முதன்முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது, இங்கே, ஆபிரகாம், சாலேமின் ராஜாவாகவும், தேவனின் ஆசாரியராகவும் இருந்த மெல்கிசேதேக் என்ற மனிதருடன் குறிப்பிடத்தக்க சந்திப்பை மேற்கொண்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

18 அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து, 19 அவனை ஆசீர்வதித்து: வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிர[கா]முக்கு உண்டாவதாக. 20 உன் சத்துருக்களை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னான். இவனுக்கு ஆபிர[கா]ம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்.

தேவனின் ஆசாரியனாகிய மெல்கிசேதேக்கு, தேவனுடைய ஊழியக்காரனாகிய ஆபிரகாமுக்கு சொன்ன ஆசீர்வாதம் அதுதான். இப்போது ஆபிரகாம் தனது ஆசாரியரான மெல்கிசேதேக்கின் ஆசீர்வாதத்திற்கு எவ்வாறு பதிலளித்தார் என்பதைக் கவனியுங்கள்.

இவனுக்கு ஆபிர[கா]ம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்

எனவே, தசமபாகம் என்பது இரண்டு விஷயங்கள் ஆகும்: இது தேவனின் ஆசீர்வாதத்திற்கு பதிலளிக்கும் ஒரு வழியாகும், மேலும் இது தேவனுடைய ஆசாரியனை மதிக்கும் ஒரு வழியாகும். ஆபிரகாம், முதன்முதலில் அதை நடைமுறைப்படுத்தியது இப்படித்தான், ஆபிரகாம் விசுவாசிக்கிற அனைவருக்கும் தகப்பன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாம் விசுவாசிகளாக இருந்தால், அவர் நம்முடைய ஆவிக்குரிய தகப்பன் – அவருடைய விசுவாசத்தின் படிகளில் நாம் நடக்க வேண்டும். அவருடைய விசுவாசத்தின் முக்கிய படிகளில் ஒன்று தசமபாகம் ஆகும்.

புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து, மெல்கிசேதேக்கின் வரிசைக்குப் பிறகு நமது பிரதான ஆசாரியன் என்பதை எபிரெயர் 7 காட்டுகிறது. மேலும், மெல்கிசேதேக்கு ஆபிரகாமிடமிருந்து ஒரு ஆசாரியராக பத்தில் ஒரு பங்கை சேகரித்தார் என்பதையும் அது வலியுறுத்துகிறது. எபிரெயர் 7:6 மெல்கிசேதேக்கைப் பற்றி கூறுகிறது:

6 ஆகிலும், அவர்களுடைய வம்சவரிசையில் [அது லேவிய ஆசாரியரிடத்திலிருந்து] வராதவனாகிய இவன் ஆபிரகாமின் கையில் தசமபாகம் வாங்கி, வாக்குத்தத்தங்களைப் பெற்றவனை ஆசீர்வதித்தான்.

எனவே, அந்த தசமபாகம் என்பது தேவனின் ஆசீர்வாதத்திற்கான நமது பிரதிபலிப்பாகும். இது நாம் தேவனை கனம்பண்ணும் முறையாகும். மேலும், தசமபாகம் களஞ்சியசாலைக்குள் [பண்டகசாலைக்குள்] கொண்டுவரப்பட வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள். களஞ்சியம் [பண்டகசாலை] என்றால் என்ன? பதில் எளிமையானதென்று நான் நினைக்கிறேன்: உண்ணுவதற்கும், விதைப்பதற்கும் உங்கள் விதையை நீங்கள் பெறும் இடம்தான் அது. உங்கள் விநியோகத்தின் ஆதாரத்தை நீங்கள் அங்கீகரிக்கும் வழி அதுதான். இதை நான் உங்களுக்கு ஒரு சிறிய பழமொழியில் வைக்கிறேன்: “நீங்கள் ஹாலிடே இன்னில் சாப்பிட்டால், ஹோவர்ட் ஜான்சனில் உங்கள் கட்டணத்தைச் செலுத்த வேண்டாம்.” உங்கள் தசமபாகத்துடன் உங்கள் ஆவிக்குரிய விநியோகத்தின் ஆதாரத்தை ஒப்புக்கொள்ளுங்கள்.

சரி. கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து அதைச் செய்ய உங்களுக்கு உதவட்டும்.

இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது. ஆனால் நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். நாளை செழிப்பு என்னும் இதே தலைப்பிலே தொடர்கிறேன். செழிப்பிற்கான மற்றொரு சிறப்புமிக்க குறிப்பிட்ட வழியை நான் விளக்குகிறேன்.

லைக்
பகிரவும்