அவிசுவாசத்தின் ஆபத்து

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: ஆகஸ்ட் 2026
Read Time: 10
அவிசுவாசம் நம்மை ஜீவனுள்ள தேவனிடமிருந்து பிரிக்கும் கடுமையான விளைவுகளைக் கொண்டுள்ளது. 'அவிசுவாசத்தின் ஆபத்து' என்ற செய்தியில் டெரெக் பிரின்ஸ் அவர்களுடன் இணைந்து, விசுவாசத்தைக் காத்துக்கொள்வதன் அவசியத்தைக் குறித்துக் கற்றுக்கொள்ளுங்கள். 'விசுவாசம்' தொடரின் 5-ஆம் பகுதியைக் கேட்டு, உங்கள் இருதயத்தைச் சந்தேகத்திலிருந்து பாதுகாத்து, தேவனுடைய ராஜ்யத்தில் நிலைத்திருப்பது எப்படி என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
Transcript
இன்று மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது. இந்த வாரம் எனது முந்தைய பேச்சுகளில், விசுவாசத்தைப் பற்றிய பின்வரும் உண்மைகளை நான் நிறுவினேன்.
முதலாவதாக, தேவனுடன் தொடர்புகொள்வதில் இன்றியமையாத ஒன்று விசுவாசம் ஆகும். இரண்டாவதாக, விசுவாசம் நம்மை கண்ணுக்குத் தெரியாத, நித்திய உலகத்துடன் தொடர்புபடுத்துகிறது. மூன்றாவதாக, விசுவாசம் இதயத்தில் உள்ளது, அதேசமயம் நம்பிக்கை புத்தியில் உள்ளது. நான்காவதாக, நீதியான வாழ்க்கைக்கு விசுவாசம் மட்டுமே அடிப்படையாகும்.
இன்று என் பேச்சில், நான் விசுவாசத்துக்கு எதிரானதைக் கையாளப் போகிறேன்: அதுதான் அவிசுவாசம். அவிசுவாசத்தின் ஆபத்தைப் பற்றி நான் உங்களுக்கு சில தீவிர எச்சரிக்கைகளை தருகிறேன்.
இன்று நாம் பார்க்கப் போகும் முக்கிய பகுதி, எபிரெயர் புத்தகத்தில் காணப்படுகிறது. இது எபிரெயர் 3:7இல் தொடங்கி, 4:3 வரை தொடர்கிறது; எனவே, நான் எபிரெயர் புத்தகத்திலிருந்து ஒரு கணிசமான பகுதியைப் படிக்கப் போகிறேன். 3:7இல் தொடங்கி, அதிகாரம் 4:3 வரை செல்கிறது; நான் படிக்கப் போகும் இந்தப் பகுதியின் முழு கருப்பொருளும் அவிசுவாசத்தின் ஆபத்துகளுக்கு எதிரான எச்சரிக்கையாகும். எபிரெயர் புத்தகத்தின் எழுத்தாளர் சங்கீதம் 95இல் இருந்து கணிசமாக மேற்கோள் காட்டுகிறார், மேலும், சங்கீதம் 95இல், சங்கீதக்காரன் என்ன சொல்கிறார் என்பதை அடிப்படையாகக் கொண்டு அவருடைய எச்சரிக்கையை உருவாக்குகிறார். இப்போது நான் எபிரெயர் புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை வாசிக்கிறேன், பின்னர், அதில் சில கருத்துக்களை உங்களுக்குத் தருகிறேன்.
7 ஆகையால், பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறபடியே: இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில்,
8 வனாந்தரத்திலே கோபமூட்டின போதும், சோதனைநாளிலும் நடந்ததுபோல [அவர்கள் இஸ்ரவேலர்கள்], உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள்.
9 அங்கே உங்கள் பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சைப்பார்த்து, நாற்பது வருஷகாலம் என் கிரியைகளைக் கண்டார்கள்.
10 ஆதலால், நான் அந்தச் சந்ததியை அரோசித்து, அவர்கள் எப்பொழுதும் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி;
11 என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார்.
12 சகோதரரே, ஜீவனுள்ள தேவனை விட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்.
13 உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்தி சொல்லுங்கள்.
14 நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்.
15 இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், கோபமூட்டுதலில் நடந்ததுபோல உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று சொல்லியிருக்கிறதே.
16 கேட்டவர்களில் கோபமூட்டினவர்கள் யார்? மோசேயினால் எகிப்திலிருந்து புறப்பட்ட யாவரும் அப்படிச் செய்தார்களல்லவா?
17 மேலும், அவர் நாற்பது வருஷமாய் யாரை அரோசித்தார்? பாவஞ்செய்தவர்களையல்லவா? அவர்களுடைய சவங்கள் வனாந்தரத்தில் விழுந்துபோயிற்றே.
18 பின்னும், என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று அவர் யாரைக்குறித்து ஆணையிட்டார்? கீழ்ப்படியாதவர்களைக்குறித்தல்லவா?
19 ஆதலால், அவிசுவாசத்தினாலே அவர்கள் அதில் பிரவேசிக்கக்கூடாமற் போனார்களென்று பார்க்கிறோம்.
4:1 ஆனபடியினாலே, அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க, உங்களில் ஒருவனும் அதை அடையாமல் பின்வாங்கிப்போனவனாகக் காணப்படாதபடிக்குப் பயந்திருக்கக்கடவோம்.
2 ஏனெனில், சுவிசேஷம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுபோல நமக்கும் அறிவிக்கப்பட்டது; கேட்டவர்கள் விசுவாசமில்லாமல் கேட்டபடியினால், அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் பிரயோஜனப்படவில்லை. [மற்றொரு மொழிபெயர்ப்பு, “கேட்டவர்களிடத்தில் அது விசுவாசத்துடன் இணைக்கப்படவில்லை” என்று கூறுகிறது]
3 விசுவாசித்தவர்களாகிய நாமோ அந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்கிறோம்; அவருடைய கிரியைகள் உலகத்தோற்றமுதல் முடிந்திருந்தும்; இவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார்.
இப்போது, எபிரெயர் புத்தகத்தின் எழுத்தாளர் சொல்வதன் சில தாக்கங்களைப் பார்ப்போம். வசனம் 7 க்கு திரும்புவோம், அவர் கூறுகிறார், “இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில்,” தேவனுடைய சத்தத்தைக் கேட்பது அல்லது கேளாமல் இருப்பதுதான் மையப் பிரச்சனையாகும். விசுவாசத்தின் திறவுகோல் தேவனுடைய சத்தத்தைக் கேட்பதுதான். அவிசுவாசத்தின் காரணம் தேவனுடைய சத்தத்தைக் கேளாமல் இருப்பதுதான்.
பின்னர், அது தொடர்கிறது, வசனம் 8:
8 உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள்.
எனவே, தேவனுடைய சத்தத்தைக் கேட்காததன் விளைவு, அவிசுவாசத்தில் நம் இதயங்களை கடினப்படுத்துவதாகும். பின்னர், வசனம் 10இல் நாம் பார்க்கலாம்:
10 ஆதலால், நான் அந்தச் சந்ததியை அரோசித்து,…
அவிசுவாசம் தேவனை கோபப்படுத்துகிறது, அது அவரை கோபத்திற்கு ஆளாக்குகிறது. மேலும், வசனம் 12இல், எபிரெயர் புத்தகத்தின் எழுத்தாளர் நம்மிடம் கூறுகிறார்:
12 சகோதரரே, ஜீவனுள்ள தேவனை விட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இவை அனைத்தும் நமக்குப் பொருந்தும்; இந்த ஆபத்துகளிலிருந்து நாம் விடுபடவில்லை. இந்த எச்சரிக்கைகள் நமக்குத் தேவையானது. பின்னர், அது மேலும் கூறுகிறது, “….அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம்…” அவிசுவாசமுள்ள இருதயம் ஒரு பொல்லாத இருதயம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஜீவனுள்ள தேவனை விட்டுவிலகும்படி அது நம்மை ஏற்படுத்துகிறது. பின்னர், வசனம் 13இல்:
13 …..நாடோறும் ஒருவருக்கொருவர் புத்தி சொல்லுங்கள்.
எனவே, விசுவாசிக்கும்படி ஒருவரையொருவர் ஊக்குவித்து, அவிசுவாசத்தின் ஆபத்துகளுக்கு எதிராக ஒருவரையொருவர் தொடர்ந்து எச்சரித்துக்கொண்டிருக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. யாரும் தோல்வியடைந்து அவிசுவாசம் என்னும் அதே உதாரணத்தில் விழுந்துபோகாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். பின்னர், வசனம் 15இல், “இன்று” என்னும் வார்த்தை மீண்டும் வருவதை நாம் கவனிக்கலாம், இந்த வார்த்தைகள் ஒரு கருப்பொருள் போல செல்கிறது. “இன்று” என்பது இப்போது ஆகும். நமது மறுமொழியைத் தள்ளிப்போடுவது ஆபத்தானது. நாம் கேட்பதையும், கீழ்ப்படிவதையும் எவ்வளவு காலம் தள்ளிப்போடுகிறோமோ, அதைச் செய்வது அவ்வளவு கடினமாகிறது. ஆபிரகாமைப் பற்றிய குறிப்பிடத்தக்க விஷயங்களில் ஒன்று, தேவன் அவரிடம் பேசும்போதெல்லாம், அவர் உடனடியாகக் கீழ்ப்படிந்தார். தாமதமாக கீழ்ப்படிவதை விட, உடனடியாகக் கீழ்ப்படிவது மிகவும் எளிதானது.
எனவே, நினைவில் கொள்ளுங்கள், செய்தி என்னவென்றால், இன்று, இன்று, இன்று என்பதாகும். வசனங்கள் 16 & 17. அவிசுவாசம் தேவனை கோபமூட்டுகிறதை நாம் மீண்டும் காணலாம். ஒரு முழு தலைமுறையும் அவரை விசுவாசிக்காததால், அவர்கள் மீது கோபம் கொண்டார். பின்னர், வசனம் 19, நான் அதை வாசிக்க விரும்புகிறேன்:
19 ஆதலால், அவிசுவாசத்தினாலே அவர்கள் [இஸ்ரவேலர்கள்] அதில் பிரவேசிக்கக்கூடாமற் போனார்களென்று பார்க்கிறோம்.
தேவன் கொடுத்த சுதந்தரத்திலிருந்து இஸ்ரவேலைத் தடுத்து நிறுத்திய ஒரு அடிப்படைக் காரணம் அவிசுவாசம். அதே காரணம் இன்று நம்முடைய சுதந்தரத்திலிருந்து நம்மைத் தடுக்கும்.
4:1ஐ துவங்குவோம்
1 …… பயந்திருக்கக்கடவோம். [எபிரெயர் புத்தகத்தின் எழுத்தாளர் அதை இன்று நமக்கு பொருத்துகிறார். அவர் கூறுகிறார்: இந்த பாடத்திற்கு நாம் கவனம் செலுத்துவோம்; கவனக்குறைவாகவோ, மந்தமாகவோ அல்லது அலட்சியமாகவோ இருக்க வேண்டாம். பயந்திருக்கக்கடவோம். பின்னர், 4:2இல், அவர் கூறுகிறார்:] 2 ….கேட்டவர்கள் விசுவாசமில்லாமல் கேட்டபடியினால், அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் பிரயோஜனப்படவில்லை.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நம் வாழ்வில் தேவனுடைய வார்த்தைகளின் நன்மைகளை வெளிக்கொண்டுவர விசுவாசம் தேவைப்படுகிறது. விசுவாசம் ஒரு வினையூக்கி போன்றது என்று நீங்கள் கூறலாம். அது காணப்படும்போது, அது தேவனுடைய வார்த்தையின் நன்மைகளை அல்லது வாழ்க்கையில் வெளிப்படுத்துகிறது, ஆனால், அது இல்லாதபோது, தேவனுடைய வார்த்தையின் பலன்களை நாம் பெறுவதில்லை. தேவனுடைய வார்த்தை நம்மிடம் வரலாம், ஆனால் அது நமக்கு நன்மை செய்யாது. அது தேவனுடைய ஆசீர்வாதத்தின் நோக்கங்களை நிறைவேற்றாது, ஏனெனில் அது விசுவாசத்துடன் இணைக்கப்படவில்லை. தேவனுடைய வார்த்தை நம் வாழ்வில் அதன் வேலையைச் செய்ய விசுவாசம் தேவைப்படுகிறது.
பின்னர், அங்குள்ள இறுதி கருத்து, “விசுவாசித்தவர்களாகிய நாமோ அந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்கிறோம்.” உண்மையான விசுவாசம் நம்மை இளைப்பாற வைக்கிறது. நான் இப்போது உங்களிடம் பேசும்போது, உங்களுக்கு அந்த விசுவாசம் இருக்கிறதா? நீங்கள் அந்த நிபந்தனைகளை சந்தித்தீர்களா அல்லது தேவனுடைய சத்தத்தை கேட்காத, தங்கள் இருதயங்களைக் கடினப்படுத்திய அந்த இஸ்ரவேலர்களைப் போல நீங்கள் ஆபத்தில் இருக்கிறீர்களா, அவர்களுடைய அவிசுவாசத்தின் காரணமாக, தேவன் அவர்களுக்காக வைத்திருந்த அனைத்தையும் தவறவிட்டார்கள்! இன்று உங்களுக்கும் எனக்கும் அப்படி நடந்தால் அது என்ன ஒரு சோகம்! இருப்பினும், எபிரெயர் புத்தகத்தின் எழுத்தாளர் அது நடக்கக்கூடும் என்பதை மிகத் தெளிவாகக் கூறுகிறார், நாம் கவனித்துக்கொள்ளாவிட்டால்; நாம் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால், அது நடக்கும். எபிரெயரின் அந்த நான்காவது அதிகாரம் முதல் 11வது வசனம் வரை இன்னும் கொஞ்சம் வாசித்தால், நாம் சொல்லிக்கொண்டிருக்கும் எல்லாவற்றின் நடைமுறை பயன்பாடு என்று நான் அழைக்கக்கூடிய விஷயத்திற்கு வருவோம். எழுத்தாளர் கூறுகிறார்:
11 ஆகையால், அந்தத் திருஷ்டாந்தத்தின்படி, ஒருவனாகிலும், கீழ்ப்படியாமையினாலே விழுந்துபோகாதபடிக்கு, நாம் இந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்க ஜாக்கிரதையாயிருக்கக் கடவோம்.
நான் இப்படி சொல்வதை நீங்கள் கேட்டிருக்கலாம், வேதத்தில் ஒரு “ஆகையால்” என்ற வார்த்தையை நீங்கள் கண்டால், அது எதற்காக இருக்கிறது என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்… எனவே, அந்த வசனம், “ஆகையால்” என்று தொடங்குகிறது. “ஆகையால்,…நாம் இந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்க ஜாக்கிரதையாயிருக்கக் கடவோம். “ஆகையால்” என்பதன் பொருள் என்னவென்றால், பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலர்கள் செய்ததுபோல் நாம் வழிதவறி விடக்கூடாது. அவிசுவாசத்துக்கு எதிராக நம்மைக் காத்துக்கொள்வோம்; மிகவும் ஜாக்கிரதையாயிருப்போம்; விசுவாசத்தில் நடப்பதற்கும், நம்முடைய விசுவாசத்தை பாதுகாப்பதற்கும், நம்முடைய விசுவாசத்தை வளர்ப்பதற்கும், ஒருவரையொருவர் விசுவாசத்தில் பலப்படுத்துவதற்கும், ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துவதற்கும் நம்மைப் பிரயோகிப்போம். அவிசுவாசத்தின் மூலம் இஸ்ரவேல் செய்த அதே பயங்கரமான சோகமான தவறை எப்போதும் செய்யாமல் இருப்போம்; மேலும், அவிசுவாசம், இறுதியில், எப்போதும் கீழ்ப்படியாமைக்கு வழிவகுக்கிறது என்பதைக் கவனியுங்கள். 3 ஆம் அதிகாரத்தின் இறுதியில், “அவிசுவாசத்தினாலே அவர்கள் அதில் பிரவேசிக்கக்கூடாமற் போனார்கள்….,” ஆனால், 4ஆம் அதிகாரத்தில், அது சொல்கிறது, “கீழ்ப்படியாமையினாலே விழுந்துபோகாதபடிக்கு….” அதை மனதில் கொள்ளுங்கள், அவிசுவாசத்துக்கும், கீழ்ப்படியாமைக்கும் நேரடியான தொடர்பு இருக்கிறது.
இன்று இந்தப் பேச்சை நான் முடிப்பதற்கு முன், தேவனுடைய சத்தத்தை கேட்பதற்கும், கீழ்ப்படிதலுக்கும் உள்ள முக்கியத்துவத்தை உங்களுக்கு வலுப்படுத்த விரும்புகிறேன். இது வேதாகமத்தின் ஒரு முக்கிய கருப்பொருளாகும். அதை வலியுறுத்தும் வேதத்தின் சில முக்கிய பகுதிகளை மட்டும் படிக்கப் போகிறேன். யாத்திராகமம் 15:26:
26 நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்னேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.
கர்த்தரை உங்கள் குணமாக்குபவராக அறிந்து கொள்வதற்கான அடிப்படைத் தேவை அதுதான் என்று நான் கூறுவேன். அது அவரது சத்தத்துக்கு தீவிர கவனம் செலுத்துவதாகும். உபாகமம் 28:1 & 2:
1 இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார். 2 நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும்.
எல்லா ஆசீர்வாதங்களுக்கும் முக்கியமானது என்ன? கர்த்தருடைய சத்தத்தை ஜாக்கிரதையுடன் கேட்பீர்களானால். பின்னர், புதிய ஏற்பாட்டில், யோவான் 10:27இல், இயேசு அதே வார்த்தைகளை துல்லியமாக கூறுகிறார்:
27 என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது.
இயேசுவின் சீஷராக இருப்பதன் அடையாளம் என்ன? தனித்துவமான, அடிப்படைத் தேவை என்ன? அது அவரது சத்தத்தைக் கேட்பதாகும். அவருடைய சத்தத்தைக் கேட்டால்தான், அவரைப் பின்பற்ற முடியும். ஆகவே, கர்த்தருடைய சத்தத்தைக் கேட்பதன் மூலம், விசுவாசம் வருகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது. அடுத்த வாரம், திங்கள் முதல் வெள்ளி வரை இதே நேரத்தில் உங்களுடன் மீண்டும் வருவேன்.
அடுத்த வாரம், இந்த விசுவாசத்தின் தலைப்பில் தொடர்கிறேன். திங்கள் கிழமை வாரத்தின் எனது முதல் பேச்சில், தேவன் எனக்குக் கற்றுக்கொடுத்த மிக முக்கியமான ரகசியங்களில் ஒன்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்: விசுவாசம் எப்படி வருகிறது.
ஆனால், சில முக்கிய அறிவிப்புகளுக்காக காத்திருங்கள். குறிப்பாக, மனந்திரும்பி, விசுவாசியுங்கள் என்ற எனது புத்தகத்தை நீங்கள் எவ்வாறு பெறலாம் என்பது பற்றிய அறிவிப்பு. மனந்திரும்புதல் மற்றும் விசுவாசத்தின் உண்மையான தன்மையை, எளிய நடைமுறை வார்த்தைகளில் இந்த புத்தகம் விளக்குகிறது, மேலும், கிறிஸ்தவ வாழ்வில் நடந்துகொண்டிருக்கும் அனைத்து வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இவை எவ்வாறு அவசியம் என்பதைக் காட்டுகிறது. இந்தப் புத்தகத்தை நீங்கள் எவ்வாறு பெறலாம் என்பதை பின்வரும் அறிவிப்பு உங்களுக்குச் சொல்லும்.
குறியீடு: RP-R028-105-TAM









