தேவனின் பிள்ளையாக மாறுவது எப்படி

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: ஆகஸ்ட் 2026
Read Time: 11
"தேவனுடைய பிள்ளையாவது எப்படி" என்ற போதனையில் டெரெக் பிரின்ஸுடன் இணைந்து தேவனுடைய பிள்ளையாக மாறும் ஆன்மீகப் பயணத்தைக் கண்டறியுங்கள். நிக்கொதேமுவுடன் இயேசு நடத்திய உரையாடலின் மூலம், பரலோக ராஜ்யத்திற்குள் நுழைய 'தண்ணீரினாலும் ஆவியினாலும் பிறக்க' வேண்டியதன் அவசியத்தை இது விளக்குகிறது. 'தேவனுடைய வாக்குத்தத்தங்களின் தேசத்தில் நடத்தல்' தொடரின் 3-ஆம் பாகமான இது, வேதவசனங்களின் அடிப்படையில் நடைமுறை ஆலோசனைகளை வழங்குகிறது.
Transcript
உங்களுடன் மீண்டும் இருப்பது நல்லது, தேவனுடைய வாக்குத்தத்தங்களின் தேசத்தில் இந்த வாரம் நடத்தப்பட்ட சுற்றுப்பயணத்தை நாம் தொடரலாம். இந்த வாரத்தில் ஒவ்வொரு நாளும் நம் வாழ்வில் பொதுவாக எழும் சில தேவைகள் அல்லது பிரச்சனைகளை நான் கையாளுகிறேன், மேலும், அந்த குறிப்பிட்ட சூழ்நிலைக்கு பொருத்தமான தேவனுடைய வார்த்தையின் குறிப்பிட்ட வாக்குத்தத்தங்களை கண்டுபிடித்து உரிமைகோருவதன் மூலம் அந்த தேவையை எவ்வாறு பூர்த்தி செய்யலாம் அல்லது அந்த சிக்கலை தீர்க்கலாம் என்பதை நடைமுறை வழியில் நான் உங்களுக்கு காட்டுகிறேன்.
நேற்று நான் பாவத்தின் பிரச்சனையை கையாண்டேன். தேவன் நம்மை மன்னிப்பார் என்பதில் எப்படி உறுதியாக இருக்க முடியும்? இன்று நமது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அடிப்படையான மற்றொரு கேள்வியைக் கையாளப் போகிறேன், “தேவனின் பிள்ளையாக மாறுவது எப்படி?” நாம் முதலில், இயேசுவுக்கும், அவர் வாழ்ந்த காலத்தின் மதத் தலைவராக இருந்த நிக்கொதேமு என்ற பரிசேயருக்கும் இடையே நடந்த உரையாடலுக்குத் திரும்புவோம். இந்த உரையாடல் யோவானின் நற்செய்தி நூல் 3ஆம் அதிகாரம், 1-11 வசனங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும், உரையாடலின் பதிவைப் படிக்கப் போகிறேன்:
1 யூதருக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான். 2 அவன் இராக்காலத்திலே இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான். 3 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 4 அதற்கு நிக்கொதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக்கூடுமோ என்றான். 5 இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். 6 மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். 7 நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து அதிசயப்படவேண்டாம். 8 காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார். 9 அதற்கு நிக்கொதேமு: இவைகள் எப்படி ஆகும் என்றான். 10 இயேசு அவனை நோக்கி: நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும் இவைகளை அறியாமலிருக்கிறாயா? 11 மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், நாங்கள் அறிந்திருக்கிறதைச் சொல்லி, நாங்கள் கண்டதைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறோம்; நீங்களோ எங்கள் சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.
சரி, அது ஒரு குறிப்பிடத்தக்க உரையாடலாக இருந்தது. நிக்கொதேமு, வெளிப்படையாக, ஒரு நேர்மையானவர், நல்லவர், புத்திசாலி மற்றும் படித்தவர், என்றாலும், இயேசு என்ன பேசினார் என்பதை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை என்பது சுவாரஸ்யமானது. இன்னும், வெளிப்படையாக, இயேசு வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயங்களில் ஒன்றைப் பற்றி பேசுகிறார். “மீண்டும் பிறப்பது” அல்லது “மேலிருந்து பிறப்பது” அல்லது “புதிதாகப் பிறப்பது” என்று அவர் விவரிக்கும் ஒரு அனுபவத்தைப் பற்றி அவர் பேசிக்கொண்டிருந்தார். அவை அனைத்தும் முறையான மொழிபெயர்ப்புகள் ஆகும்.
இந்த அனுபவம் நிக்கொதேமுக்கு அறிவிக்கும் அளவுக்கு மிக முக்கியமானது, ஒருவருக்கு இந்த அனுபவம் இல்லாவிட்டால், அவர் மீண்டும் பிறவாவிட்டால், அவர் பார்க்க முடியாது, தேவனுடைய ராஜ்யத்தில் நுழைய முடியாது. நிச்சயமாக, இந்த வார்த்தை நிக்கொதேமுவை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது, மேலும், அவர் இயேசு என்ன சொல்ல வருகிறார் என்பதை அறிய முயன்றார். இயேசு அவருக்கு விளக்கினார், சாராம்சத்தில், இரண்டு வெவ்வேறு வகையான இயற்கை நிலைகள் உள்ளன. ஒரு மாம்சீகமான சரீர இயல்பு உள்ளது, பின்னர், ஒரு ஆவிக்குரிய இயல்பு உள்ளது. அவர் சொல்கிறார், “மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்.” நிக்கொதேமு எப்படியாவது மீண்டும் தன் தாயின் வயிற்றில் சென்று சிறு குழந்தையாகப் பிறக்க வேண்டும் என்று நினைத்தான். இயேசு சொல்கிறார், “நான் பேசுவது அதுவல்ல. உன்னிடம் ஏற்கனவே உள்ள மாம்ச இயல்பை உருவாக்கும் பிறப்பைப் பற்றி நான் பேசவில்லை.” ஆனால், அவர் சொல்கிறார், சாராம்சத்தில், “உனக்கு இதுவரை இல்லாத ஒரு ஆவிக்குரிய இயல்பை உருவாக்கும் பிறப்பைப் பற்றி நான் பேசுகிறேன்.” இதற்கு இயேசு காற்றிலிருந்து ஒரு உதாரணத்தைக் கொடுத்தார், அது நம்முடைய இயற்கையான உலகில் மிகவும் பழக்கமான விஷயங்களில் ஒன்றாகும். இயேசு சொன்னார், “காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்.”
பழைய ஏற்பாட்டின் எபிரேயத்திலும், புதிய ஏற்பாட்டின் கிரேக்கத்திலும் ஒரே வார்த்தைக்கு “காற்று” அல்லது “சுவாசம்” அல்லது “ஆவி” என்ற பொருள் இருப்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். எனவே, இயேசு காற்றைப் பற்றி ஒரு உதாரணமாகப் பேசும்போது, அவர் பரிசுத்த ஆவியானவரின் நடத்தையை எடுத்துக்காட்டும் உதாரணத்திற்கு நம்மை வழிநடத்துகிறார். மேலும், அவர் சொல்கிறார், “பரிசுத்த ஆவியானவர் காற்றைப் போன்றவர். காற்று எங்கே வீச வேண்டும் என்று யாரும் சொல்வதில்லை. அது நம் வாழ்வில் வருகிறது; அது எங்கிருந்து வருகிறது என்று நமக்குத் தெரியாது, அது எங்கே போகிறது என்றும் நமக்குத் தெரியாது.” இயேசு சொல்கிறார், “மறுபிறப்பில் பரிசுத்த ஆவியானவரின் செயலும் அப்படித்தான் இருக்கிறது.” ஆவி எங்கிருந்து வருகிறது என்று நமக்குத் தெரியாது, அது எங்கு செல்கிறது என்று நமக்குத் தெரியாது, ஆனால் அது என்ன செய்கிறது என்பது நமக்குத் தெரியும்.
கவனியுங்கள், நாம் யாரும் காற்றைப் பார்த்ததில்லை. நான் ஒருமுறை, மிகவும் வாக்குவாதம் செய்யும் ஒரு மனிதனிடம் பேசிக்கொண்டிருந்தேன், அவர் சொன்னார், “சரி, நான் பார்க்க முடியாத எதையும் நான் நம்பவில்லை!”
“சரி, அது அபத்தமானது!” என்று நான் அவரிடம் சொன்னேன். “நீங்கள் காற்றைப் பார்த்ததில்லை, ஆனால் நீங்கள் காற்றை நம்புகிறீர்கள், இல்லையா?” என்றேன், அந்த பதிலுக்கு அவர் திகைத்தார்.
காற்று எங்கே செயல்படுகிறது என்பதை நாம் எப்படி அறிவோம்? நாம் காற்றைப் பார்ப்பதால் அல்ல, அது என்ன செய்கிறது என்பதைக் காண்பதால்தான். நாம் என்ன பார்க்கிறோம்? வானம் முழுவதும் மேகங்கள் இழுத்துச் செல்வதைக் காண்கிறோம்; தெருவில் தூசி எழும்புவதைப் பார்க்கிறோம்; மரங்கள் வளைகின்றன; ஒரு பெண்ணின் தலையில் உள்ள தொப்பி அல்லது துணி பறப்பதையும், அவள் அதற்கு பின்னாலே ஓடுகிறதையும் பார்க்கலாம். இவை அனைத்தும், இது போன்ற பல நிகழ்வுகளும் காற்று ஒரு குறிப்பிட்ட பகுதியில் செயல்படுவதைக் குறிக்கிறது. சரி, ஒரு நபர் மறுபடியும் பிறக்கும்போதும் அப்படித்தான் நடக்கிறது. தேவ ஆவி அவன் வாழ்வில் வருகிறபோது, அது எங்கிருந்து வருகிறது என்று அவனுக்குத் தெரியாது, அது எங்கே போகிறது என்றும் அவனுக்குத் தெரியாது, ஆனால் சில விஷயங்கள் நடக்கின்றன என்பதை அவன் அறிந்திருக்கிறான்.
பல வருடங்களுக்கு முன்பு, நான் லண்டனில் போதகராக இருக்கும்போது, டென்மார்க்கைச் சேர்ந்த ஒரு இளம் பெண், பெயரளவிலான தேவாலயத்திற்கு செல்லும் ஒரு பெண், இந்த அனுபவத்தைப் பற்றி மேலும் அறிய எங்கள் வீட்டிற்கு வந்தது எனக்கு நினைவிருக்கிறது; நானும் எனது முதல் மனைவியும் அவளுக்கு அறிவுறுத்தி, அவள் மீண்டும் பிறக்க என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கினோம் (இந்த செய்தி முடிவடைவதற்கு முன்பு நான் அதை விளக்கப்போகிறேன்). பின்னர், நான் அவளை ஒரு எளிய ஜெபத்தில் வழிநடத்தினேன், அதில் தேவன் அவளிடம் என்ன கேட்டாரோ அதைச் செய்தாள். அவள் ஒரு முறையான நபராக இருந்தாள், எந்த விதத்திலும் உணர்ச்சிவசப்படவில்லை (டேனிஷ் மக்கள், பொதுவாக, மிகவும் உணர்ச்சிவசப்பட்ட மக்கள் குழுவல்ல), எங்கள் அறையில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து அவள் ஜெபத்தைச் சொன்ன பிறகு, அவள் எழுந்து அமர்ந்தாள், அவள் கண்களில் இரண்டு பெரிய கண்ணீர் துளிகள் தோன்றி அவள் கன்னங்களில் வழிந்தன. எனவே, அவள் தன் கைக்குட்டையால் தன் கண்களைத் துடைத்தாள், சுய உணர்வுடன், மேலும், இரண்டு கண்ணீர் துளிகள் தோன்றி அவள் கன்னங்களில் வழிந்தது. அவள், “”நான் ஏன் அழுகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை.” மேலும், நான் சொன்னேன், “பாருங்கள், காற்று இப்போதுதான் வீச ஆரம்பித்தது.” எனவே, பரிசுத்த ஆவியானவர் செயல்படுகிறார் என்பதற்கு இதுவே ஆதாரங்களில் ஒன்றாகும். ஒரு மென்மையான உணர்வு, நிம்மதியான உணர்வு, அவளால் விளக்க முடியாத, புரிந்துகொள்ள முடியாத ஒரு மகிழ்சியான உணர்வு இருந்தது. அவள் கிட்டத்தட்ட வெட்கப்பட்டாள். ஆனால் அது மிகவும் உண்மையாக இருந்தது, அதை அவளால் மறைக்க முடியவில்லை.
இப்போது, யோவான் 3 இல் உள்ள உரையாடலில் பதிவுசெய்யப்பட்ட குறிப்பிட்ட நிகழ்வு நிக்கொதேமுவுடன் உள்ளது. இயேசு பலரிடம் இதையே சொன்னார் என்று நான் உறுதியாக நம்புகிறேன், ஆனால், நிக்கொதேமுவுடனான உரையாடல் ஒரு சிறப்பு காரணத்திற்காக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று நான் நம்புகிறேன். ஏனென்றால், புதிய பிறப்பிற்குப் பதிலாக வேறு ஏதாவது செய்ய முடியுமானால், நிக்கொதேமு அனைத்தையும் பெற்றிருந்தார். அவர் ஒரு மதவாதி, அவர் ஒரு படித்தவர், அவர் சமூகத்தில் ஒரு உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றிருந்தார், மேலும் அவர் ஒரு (யூத இனம்) இனத்தைச் சேர்ந்தவர், இது தேவன் சிறப்பு நோக்கங்களுக்காக ஒதுக்கியது. ஆனால், இதைக் கவனியுங்கள், மதமோ, கல்வியோ, சமூக நிலையோ, இன மேன்மையோ மறுபிறப்புக்கு மாற்று அல்ல.
நான் உங்களுக்கு இரண்டு விஷயங்களை விளக்கி வருகிறேன்: மறுபிறப்பின் அவசியம் மற்றும் என்ன நடக்கும் என்பதன் இயல்பு. இன்னும் ஒரு மிக முக்கியமான கேள்வி உள்ளது. ஒரு மனிதன் எப்படி மீண்டும் பிறக்க முடியும்? அதைத்தான் நான் இப்போது உங்களுக்குச் சொல்லப் போகிறேன். கவனமாகக் கேளுங்கள். யோவானின் சுவிசேஷம், 1 ஆம் அதிகாரம், 11-13 வசனங்களில், யோவான் இயேசுவைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்:
11 அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ, அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
இயேசு யூத மக்களிடம் ஒரு யூதராக வந்தார், ஒரு தேசத்தினிடத்தில் வந்தார் – தனி நபர்களிடத்தில் அல்ல, ஆனால், ஒரு தேசமாக, அவர்களது மேசியாவாக இருந்த அவரை நிராகரித்தனர்.
12 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். 13 அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.
தேவனிடமிருந்து பிறப்பதற்கு வழிவகுக்கும் ஒரு முக்கிய பரிவர்த்தனை என்ன, அது மீண்டும் பிறப்பது அல்லது புதிதாகப் பிறப்பது போன்றதா? தேவனிடமிருந்து பிறக்க விரும்பும் இவர்கள் என்ன செய்ய வேண்டும்? இது மிகவும் எளிமையான வாக்கியமாகும். “அவரை [இயேசுவை] ஏற்றுக்கொள்ள வேண்டும்.” மீண்டும் பிறக்க நீங்கள் செய்ய வேண்டிய ஒன்று என்ன? நீங்கள் அவரை [இயேசுவை] உங்கள் தனிப்பட்ட இரட்சகராக ஏற்றுக்கொள்ள வேண்டும், அவரை உங்கள் கர்த்தராக அறிக்கைசெய்ய வேண்டும். நீங்கள் அதை செய்யும்போது, தேவனின் பிள்ளையாக மாறுவதற்கான உரிமையை, அதிகாரத்தை அவர் உங்களுக்குக் கொடுக்கிறார். நீங்கள் அதை விசுவாசத்தின் மூலமாகவும், அவருடைய நாமத்தில் உள்ள விசுவாசத்தின் மூலமாகவும் செய்கிறீர்கள். எந்தவொரு மத நற்செயல்கள் மூலமாகவோ அல்லது உங்கள் சொந்த நீதியைப் பற்றி நீங்கள் வைத்திருக்கக்கூடிய எந்தவொரு உரிமையின் மூலமாகவோ அல்ல, மாறாக, அவருடைய நாமத்தின்மேல் உள்ள விசுவாசத்தின் மூலமாகத்தான். இதன் விளைவாக, நீங்கள் தேவனிடத்திலிருந்து பிறந்தவர்களாகிறீர்கள்.
இப்போது, அந்த வசனத்தில் நாம் சிந்திக்கக்கூடிய மற்ற மூன்று சாத்தியங்களை யோவான் விலக்குகிறார். “இரத்தத்தினால் அல்ல” என்று அவர் சொல்கிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது இயற்கையான வம்சாவளியால் அல்ல. உங்கள் அப்பாவும், அம்மாவும் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும், இந்த அர்த்தத்தில், அது உங்களை நல்லதாக மாற்றாது. உங்களுக்கு ஒரு புதிய ஆவிக்குரிய பிறப்பு, ஒரு புதிய இயல்பு வேண்டும்.
இரண்டாவதாக, அது “மாம்சத்தின் சித்தத்தினால் அல்ல” என்று அவர் கூறுகிறார். இது சில இயற்கையான, சரீர ஆசை அல்லது பசியின் திருப்தியும் அல்ல.
மூன்றாவதாக, “புருஷனுடைய சித்தத்தினால் அல்ல” என்று அவர் கூறுகிறார். கிரேக்க வார்த்தை கணவனைக் குறிக்கும் சொல்லாக இருக்கிறது. இது கணவன் மனைவிக்கு இடையே உள்ள இயற்கையான பாலுறவின் விளைவு அல்ல. அது வேறு கோணத்தில் உள்ளது. இது சரீரப்பிரகாரம் அல்ல, இது ஆவிக்குரியது.
இப்போது, இந்த முடிவில், நீங்கள் மீண்டும் பிறக்க விரும்பினால், நீங்கள் பற்றிக்கொள்ளும் ஒரு வாக்குத்தத்தத்தை கொடுக்க விரும்புகிறேன். இது வெளிப்படுத்துதல் 3:20இல் இயேசுவால் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் இவ்வாறு கூறுகிறார்:
20 இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
நீங்கள் மறுபடியும் பிறக்க விரும்பினால், அந்த வார்த்தை உங்களுக்கானது. இயேசு இப்போதே உங்கள் இதயக் கதவுக்கு வெளியே நின்று தட்டுகிறார். அவர் நல்ல பண்புகள் கொண்ட மனிதர். அவர் தனது வழிக்குள் கட்டாயப்படுத்தமாட்டார். நீங்கள் அவர் உள்ளே வரவேண்டும் என்று விரும்பினால், நீங்கள் அவரை உள்ளே அழைக்க வேண்டும். ஆனால் நீங்கள் அவரை உள்ளே அழைத்தால், அவர் வருவார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், ஏனென்றால், அவர் ஒரு நல்ல பண்புகள் கொண்ட மனிதர், மேலும், அவர் தனது வார்த்தையைக் கடைப்பிடிப்பார். அவர் சொல்கிறார், “அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.” நீங்கள் இயேசுவுக்கு முதலாவது உங்கள் போஜனத்தைக் கொடுத்தால், பின்னர் அவரது போஜனத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்வார். நீங்கள் என்ன செய்ய வேண்டும்? நீங்கள் அவரை உள்ளே அழைக்க வேண்டும், நீங்கள் அவருக்கு விட்டுகொடுக்க வேண்டும், அதன் பின்னர், விசுவாசத்தில், அவர் உள்ளே வந்ததற்காக, நீங்கள் அவருக்கு நன்றி செலுத்த வேண்டும். நினைவில் கொள்ளுங்கள், அது அவருடைய நாமத்தின்மேல் உள்ள விசுவாசத்தால்.
சரி, இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது, ஆனால் நாளை இந்த நேரத்தில் மீண்டும் வருவேன். நாளை, நம் வயதின் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றான மன வேதனையைப் பற்றி கையாள்வேன். இந்த வகையான வேதனையிலிருந்து விடுபடுவது எப்படி என்பதை நான் விளக்குகிறேன்.
குறியீடு: RP-R024-103-TAM









